விளாத்திக்குளம் அருகே 12ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட வழக்கின் முக்கிய நபரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் பகுதியைச் சேர்ந்த
12ஆம் வகுப்பு மாணவி கடந்த 10ஆம் தேதி காணாமல்போன நிலையில், மறுநாள் காட்டுப் பகுதியில் மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தினர். மாணவியின் மரணத்திற்கு நீதி கேட்டும், குற்றவாளிகளை கைது செய்ய கோரியும் 9வது நாளாக கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், குற்றவாளிகளை கண்டுபிடிக்க 10 தனிப்படைகள் அமைத்து தூத்துக்குடி எஸ்பி உத்தரவிட்டார். இருப்பினும், குற்றவாளிகள் கண்டுபிடிக்காமல் போலீசார் திணறி வந்த நிலையில், சந்தேகத்தின் பேரில் 6 பேருக்கு டிஎன்ஏ மருத்துவ பரிசோதனை செய்து முடிவுக்காக காத்திருந்தனர்.
இதனிடையே, சம்பவம் நடந்த காட்டுப் பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், அந்த பகுதியில் இருந்த இருசக்கர வாகனத்தின் எண்ணை வைத்து விசாரணை மேற்கொண்டனர். அதில், காட்டு பகுதியில் இருந்த வாகனம் திருட்டு வாகனம் என்றும், மர்மநபர் ராமநாதபுரத்தை சேர்ந்தவர் எனவும் தெரியவந்தது.
இருப்பினும், மாணவி கொலை வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியை போலீசார் கைது செய்துள்ளனர். ராமநாதபுரத்தைச் சேர்ந்த தர்ம முனீஸ்வரன் என்பவரை போலீசார் கைது செய்த நிலையில், மேலும் இருவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
















