இந்திய இறையாண்மையைச் சீர்குலைக்க மிசோரம் மாநிலத்தில் தடைசெய்யப்பட்ட பகுதிகளுக்குள் சட்டவிரோதமாக நுழைந்த மேத்யூ வான்டைக் என்ற அமெரிக்கர் மற்றும் உக்ரைன் நாட்டைச் சேர்ந்த 6 பேரையும் NIA கைது செய்துள்ளது. ரஷ்ய உளவுத்துறை தந்த ரகசிய தகவலின் பேரில் இந்த கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அது குறித்த ஒரு செய்தி தொகுப்பு.
2024ம் ஆண்டு ஆகஸ்டில் அதிகாரத்திலிருந்து வலுக்கட்டாயமாக அகற்றப்படுவதற்கு சில மாதங்களுக்கு முன்பு, அப்போதைய வங்கதேசப் பிரதமர் ஷேக் ஹசீனா, இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்கள், வங்கதேசம் மற்றும் மியான்மரின் சில பகுதிகளை இணைத்து ஒரு கிறிஸ்தவ நாட்டை உருவாக்குவதற்கான சதி திட்டத்தில் அமெரிக்கா செயல்பட்டு வருவது குறித்து எச்சரித்திருந்தார்.
கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் இந்தியா-மியான்மர் எல்லைகளில், போர்த்திறன் மிக்க உக்ரேனியர்கள் ஊடுருவி உள்ளனர் என்று மிசோரம் முதலமைச்சர் லால்டுஹோமா கூறியிருந்தார்.
மேலும், அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தைச் சேர்ந்த உளவாளிகள் எல்லை கடந்து மிசோரம் வழியாக கிளர்ச்சியாளர்களுக்குப் பயிற்சி அளிப்பதற்காக மியான்மருக்குள் நுழைகின்றனர் என்றும் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியிருந்தார். இதில் உக்ரைன் போரில் ரஷ்யாவுக்கு எதிராக போராடியவர்களும் இருந்ததாகவும் குறிப்பிட்டிருந்தார்.
மியான்மர்-மிசோரம் எல்லையானது மேற்கத்திய கூலிப்படையினருக்கான நுழைவாயிலாக மாறியுள்ளது என்ற மிசோரம் முதலமைச்சரின் குற்றச்சாட்டு இப்போது உண்மையாகி யுள்ளது.
மியான்மரில் உள்ள இனப் போர்க் குழுக்களுக்கு ஆயுத தளவாடங்கள் வழங்கி, பயிற்சி அளித்து அரசுக்கு எதிராக போராடுவதற்கு உதவிய குற்றச்சாட்டின் பேரில் மேத்யூ வான்டைக் என்ற அமெரிக்கர் மற்றும் ஆறு உக்ரேனியர்களையும் NIA கைது செய்துள்ளது.
ரஷ்ய உளவுத் துறை தந்த இரகசிய தகவலின் படி நடந்துள்ள இந்த கைதுக்குப் பின், அமெரிக்க குடிமகனான வான்டைக் மற்றும் ஆறு உக்ரேனியர்கள், மியான்மர் இன ஆயுதக் குழுக்களுக்கு மீண்டும் மீண்டும் பயிற்சி அளித்ததையும், மேலும் அந்தக் குழுக்களின் பயன்பாட்டிற்காக ஐரோப்பாவிலிருந்து இந்தியா வழியாக சட்டவிரோதமாக அதிக எண்ணிக்கையிலான ட்ரோன்களை இறக்குமதி செய்ததையும் விசாரணையின் போது ஒப்புக்கொண்டதாக NIA அதிகாரிகள் சிறப்பு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இதனையடுத்து சிறப்பு நீதிபதி பிரசாந்த் சர்மா, குற்றம் சாட்டப்பட்ட ஏழு பேரையும் 11 நாட்கள் NIA காவலில் விசாரிக்க உத்தரவிட்டுள்ளார்.
இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் நலன்களுக்கு எதிரான சட்டவிரோத செயல்களைச் செய்ததாக UAPA சட்டப்பிரிவின் கீழ் குற்றம்சாட்டப் பட்டுள்ள இந்த ஏழு பேரும், சுற்றுலா விசாக்களில் வெவ்வேறு காலங்களில் விசாக்களில் இந்தியாவுக்கு வந்துள்ளனர். உரிய அனுமதி இன்றி சட்டவிரோதமாக மிசோரம் மாநிலத்தின் பாதுகாக்கப்பட்ட பகுதிக்குள் நுழைந்து, அங்கிருந்து மியான்மருக்குள் சென்றுள்ளனர். மியான்மரில் உள்ள பயங்கரவாதிகளுக்கு உடந்தையாக இருந்து பயிற்சியளித்த இந்த 7 பேரும் , இந்தியாவின் தேசியப் பாதுகாப்புக்கும் நேரடி அச்சுறுத்தல்களை விடுத்துள்ளனர்.
இது குறித்து இந்தியாவுக்கான உக்ரைன் தூதர் Dr. Oleksandr Polishchuk டாக்டர் ஒலெக்சாண்டர் போலிஷ்சுக், இந்திய வெளியுறவு அமைச்சகத்தில் மேற்கு பகுதி செயலாளர் சிபி ஜார்ஜை சந்தித்து, உக்ரைனிய குடிமக்களை உடனடியாக விடுவிக்கவும், அவர்களைச் சந்திக்க அனுமதிக்கவும் வேண்டுகோள் வைத்துள்ளார் என்று உக்ரைன் நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது
அமெரிக்கர் ஒருவர் NIA-யால் கைது செய்யப்பட்டிருப்பதை அறிந்துள்ளதாகவும் தனியுரிமைக் காரணங்களுக்காக, அமெரிக்க குடிமக்கள் சம்பந்தப்பட்ட வழக்குகள் குறித்து கருத்து எதுவும் தெரிவிக்க முடியாது என்றும் அமெரிக்க தூதரக செய்தித் தொடர்பாளர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையே கடந்த புதன்கிழமை தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவலைச் சந்தித்த இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதர் செர்ஜியோ கோர், இந்தச் சந்திப்பு அமெரிக்க-இந்திய உறவுகள் முன்னேறி வரும் நிலையில், முக்கிய பாதுகாப்பு மற்றும் புவிசார் அரசியல் பிரச்சினைகளில் கவனம் செலுத்தும் வகையில் மிகவும் பயனுள்ளதாக இருந்ததாக தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் டெல்லியில் நடந்த விழா ஒன்றில் பேசிய அமெரிக்க வெளியுறவுத் துறை துணைச் அமைச்சர் கிறிஸ்டோபர் லண்டாவ், 20 ஆண்டுகளுக்கு முன்பு சீனாவிடம் செய்த அதே தவறுகளை இந்தியாவிடம் செய்யப் போவதில்லை என்பதை இந்தியா புரிந்துகொள்ள வேண்டும் என்று கூறியிருந்தார்.
மேலும், சீனாவைப் போன்ற ஒரு போட்டியாளராக இந்தியா வளர்வதை அமெரிக்கா அனுமதிக்காது என்று எச்சரித்திருந்தார்.
முன்னதாக சுற்றுலாவை மேம்படுத்துவதற்காக மணிப்பூர், நாகாலாந்து மற்றும் மிசோரம் ஆகிய மாநிலங்களில் பாதுகாக்கப்பட்ட பகுதி அனுமதி தேவைகளைத் தளர்த்த காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு 2011-ல் ‘சுற்றுலா மேம்பாடு’ திட்டம் கொண்டு வரப்பட்டது.
இதுவே இந்தியாவின் வளர்ச்சியைத் தடுக்கும் மேற்கத்திய கூலிப்படையினருக்கும் கிறிஸ்தவ மத போதகர்களுக்கும் மிசோரம்-மியான்மர் எல்லையை ஒரு நுழைவாயிலாக மாற்றியுள்ளதாக கூறப்படுகிறது.
















