விருதுநகர் அருகே தேர்தல் பறக்கும் படையினரின் சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து, புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமியின் ஆதரவாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில், காரியாபட்டி அருகே உள்ள ஆவியூர் சோதனைச்சாவடியில் பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக திருச்செந்தூர் நோக்கி பயணம் மேற்கொண்டிருந்த புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமியின் கார்களை நிறுத்தி தமிழக போலீசார் சோதனை செய்ய முயன்றனர்.
இதற்கு முதலமைச்சர் ரங்கசாமியுடன் வந்த ஆதரவாளர்கள் மற்றும் பாதுகாவலர்கள் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனால் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்ட நிலையில், தமிழக போலீசார் முதலமைச்சர் ரங்கசாமியின் கார்களில் தீவிர சோதனை நடத்தினர். பின்னர் எவ்விதமான விதிமீறல்களும் இல்லாதது தெரியவந்ததையடுத்து, முதலமைச்சர் ரங்கசாமி உள்ளிட்டோர் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.
















