கவிஞர் வைரமுத்துவுக்கு ஞானபீட விருது வழங்கும் முடிவை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என, தமிழ் எழுத்தாளர்கள் 230 பேர் கூட்டாக வலியுறுத்தியுள்ளனர்.
இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள அவர்கள், வைரமுத்துவுக்கு ஞானபீடம் வழங்குவது அந்த விருதுக்கும், தமிழ் இலக்கிய மரபுக்கும் இழைக்கப்படும் அவமதிப்பு என தெரிவித்துள்ளனர்.
வைரமுத்துவின் எழுத்துக்களில் தமிழ் சமூகத்தின் ஆழமான விழுமியங்களோ, கலாச்சார பெருமிதங்களோ பாதிவாகவில்லை எனவும், வெறும் மேலோட்டமான அடுக்குமொழி சொற்களால் அலங்கரிக்கப்பட்ட வணிகமயமான எழுத்துகளே அவரது அடையாளம் எனவும் விமர்சித்துள்ளனர்.
வைரமுத்து மீது பல்வேறு பெண்கள் முன்வைத்துள்ள ME TOO புகார்களை சுட்டிக்காட்டியுள்ள அவர்கள், வைரமுத்து ஆணாதிக்க பார்வை கொண்டவர் என்பது அவரது பேச்சு மற்றும் படைப்புகளில் வெளிப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளனர்.
தகுதியற்ற ஒருவருக்கு ஞானபீட விருது செல்வது, எதிர்காலத்தில் அந்த விருது மீதான நம்பகத்தன்மையையும், பெருமையையும் முற்றிலும் அழித்துவிடும் எனவும் தமிழ் எழுத்தாளர்கள் எச்சரித்துள்ளனர்.
அத்துடன், அவருக்கு ஞானபீட விருது வழங்கும் முடிவை உடனடியாக திரும்ப பெற வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இதனிடையே, வைரமுத்துவுக்கு ஞானபீட விருது அறிவிக்கப்பட்டதற்கு படைப்பாளர்கள் சங்கம் அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பாரதீய ஞானபீடம் அமைப்பின் தலைவருக்கு கடிதம் எழுதியுள்ள அந்த அமைப்பின் நிர்வாகிகள், விருது அறிவிப்பை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
















