சென்னையில் விஜில் அமைப்பு சார்பில், தமிழ் பண்பாட்டை உயிர்ப்பிக்கும் விதமாக பண்ணிசை பெருவிழா சிறப்பாக நடைபெற்றது.
தமிழ் மற்றும் தமிழ் பண்பாட்டை பறைசாற்றும் நோக்கில் பண்ணிசைப் பெருவிழா சென்னை மயிலாப்பூரில் உள்ள பி.எஸ். உயர்நிலைப் பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள தக்ஷிணாமூர்த்தி அரங்கில் நடைபெற்றது.
தொன்மையான தமிழ் இசை மற்றும் திருமுறை மரபுகளை பாதுகாக்கும் முயற்சியாக இந்நிகழ்ச்சி அமைந்தது. செங்கோல் ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ சிவப்பிரகாச தேசிக சத்தியஞான பரமாச்சாரிய சுவாமிகள் உள்ளிட்ட பல ஆதீனங்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
தேவார திருமுறைகளை வாழ்வின் லட்சியமாகக் கொண்டு செயல்படும் ஓதுவார்களின் பங்களிப்பை பாராட்டி அவர்களுக்கு மரியாதை செலுத்தப்பட்டது. சிவபெருமானை மையமாகக் கொண்டு வாழும் ஓதுவார்களின் மரபு, பண்பாடு மற்றும் பாரம்பரியத்தை காக்கவும், அதை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லவும் இந்த விழா ஒரு முக்கிய முயற்சியாக அமைந்தது.
















