ஐந்து மாநில சட்டமன்ற தேர்தல்களை முன்னிட்டு வாக்குச்சாவடிகளில் குறைந்தபட்ச வசதிகள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என அனைத்து மாநில தேர்தல் அதிகாரிகளுக்கும் இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது.
இது தொடர்பாக தலைமை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,
தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, மேற்கு வங்கம், அசாம் ஆகிய மாநிலங்களில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் மொத்தம் 2 லட்சத்து 18 ஆயிரத்து 807 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளது எனவும்
இந்த வாக்குச்சாவடிகளில் குடிநீர், நிழற்குடைகள், கழிவறை போன்ற வசதிகள் இருப்பதை வாக்குப்பதிவு நாளன்று உறுதி செய்ய வேண்டும் எனவும் 5 மாநில தேர்தல் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தபட்டுள்ளது,
மேலும் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் அங்கீகரிக்கப்பட்ட ஆவணங்களின் பட்டியல், வாக்களிக்கும் முறை , செய்ய வேண்டிய மற்றும் செய்யக்கூடாத செயல்கள் குறித்த விழிப்புணர்வு பதாகைகளை வைக்க வேண்டும் என தெரிவித்துள்ள தலைமை தேர்தல் ஆணையம்
வாக்காளர்கள் எளிதில் தங்களது வாக்கு மையங்களை கண்டறிய வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் அடங்கிய குழுவை அமைக்க வேண்டும் எனவும்
வாக்காளர்கள் குறைபாடற்ற வாக்குப்பதிவு அனுபவத்தை உறுதி செய்வதற்காக அனைத்து களப்பணியாளர்களும் வாக்குப்பதிவு தேதிக்கு முன்பே அனைத்து பணிகளையும் செய்து முடிக்க வேண்டும் எனவும் இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது.
















