இனியும் திமுகவின் ஏவல்துறையாகக் காவல்துறை செயல்படக் கூடாது என தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள பதிவில், திருநெல்வேலி மாவட்டம் மூன்றடைப்புப் பகுதியில் பட்டியலின விவசாயி ஆறுமுகம் கொலை செய்யப்பட்டு ஆறு நாட்களாகியும் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படாத விரக்தியில் அவரது மகள் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாக வெளிவந்துள்ள செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது என தெரிவித்துள்ளார்.
கொலை செய்த குற்றவாளிகளைக் கண்டுபிடிக்காமல் காவல்துறை மெத்தனமாகச் செயல்பட்டதால், இன்று மேலும் ஒரு அப்பாவி உயிர் பலியாகியுள்ளது. திறனற்ற திமுக ஆட்சியில் கடந்த ஐந்தாண்டுகளாகக் குற்றங்கள் பெருகிய போதெல்லாம் வேடிக்கை பார்த்த கொடூரம் போதாதென்று, தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்த பின்பும், வேடிக்கை பார்க்கிறதா தமிழகக் காவல்துறை? என்றும் அவர் கூறியுள்ளார்.
இன்னும் 30 நாட்களில் இருந்த இடம் தெரியாமல் திமுக அரசைத் தமிழக மக்கள் தூக்கியெறியவுள்ள நிலையில், இனியும் ஏவல்துறையாகச் செயல்படாது, தமிழகக் காவல்துறை உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.
















