மத்திய கிழக்கு போரினால் ஏற்படும் நீண்டகால பாதிப்பையும் எதிர்கொள்ள மத்திய அரசு தயாராக உள்ளது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள போர் பதற்றம் குறித்து மாநிலங்களவையில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது பேசிய பிரதமர் மோடி, மேற்காசிய போரால் இந்தியாவும் பாதிக்கப்பட்டுள்ளது என கூறினார். ஹோர்முஸ் நீரிணையை தடையின்றி திறக்க வேண்டும் என்பதே இந்தியாவின் விருப்பம் என கூறிய பிரதமர் மோடி, அப்பகுதியில் கப்பல்கள் தாக்கப்படுவதை இந்தியா எதிர்க்கிறது எனவும் கூறினார்.
தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, வளைகுடா நாடுகளில் வசிக்கும் இந்தியர்களின் பாதுகாப்பே மத்திய அரசின் முன்னுரிமை என தெளிவுபடுத்தினார். துரதிர்ஷ்டவசமாக போரின்போது சில இந்தியர்கள் உயிரிழக்க நேர்ந்தது வருத்தமளிக்கிறது என கூறிய பிரதமர் மோடி, 41 நாடுகளில் இருந்து எரிசக்தியை இந்தியா இறக்குமதி செய்கிறது என தெரிவித்தார்.
கடும் நெருக்கடி ஏற்பட்டாலும் இந்திய விவசாயிகளின் பாதுகாப்பை மத்திய அரசு உறுதிசெய்யும் எனக் கூறிய பிரதமர், ஏழைகள், புலம்பெயர் தொழிலாளர்களை மாநில அரசுகள் பாதுகாக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
இதனிடையே பிரதமர் நரேந்திர மோடியும், இலங்கை அதிபர் அநுரகுமார திசாநாயக்கவும் தொலைபேசியில் உரையாடினர். மேற்காசியாவில் நிலவும் போர் நிலவரம் குறித்தும், இருதரப்பு நல்லுறவுகள் குறித்தும் ஆலோசித்ததாக பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
















