திருநங்கைகள் உரிமைகள் பாதுகாப்பு திருத்த மசோதா மக்களவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.
திருநங்கையர் உரிமைகள் பாதுகாப்பு திருத்த மசோதாவை சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார் மக்களவையில் தாக்கல் செய்தார்.
அதில், 2019-ஆம் ஆண்டின் அமல்படுத்தப்பட்ட திருநங்கையர் உரிமைகள் பாதுகாப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்துள்ளதாக தெரிவித்தார்.
ஹார்மோன் சிகிச்சை அல்லது பிற மருத்துவத் தலையீடுகள் மூலம் திருநங்கையராக மாறுவது ”கட்டாயப்படுத்தப்படுவதை” தடுப்பதே இம்மசோதாவின் நோக்கம் என கூறியுள்ளார் .
ஒருவர் தன்னை ஒரு திருநங்கையராக அங்கீகரிக்கும் அடையாளச் சான்றிதழைப் பெறுவதற்காக மாவட்ட நீதிபதியிடம் விண்ணப்பிக்க வேண்டும் என்றும், நியமிக்கப்பட்ட ஒரு மருத்துவ வாரியத்தின் பரிந்துரையைப் பரிசீலித்த பின்னரே மாவட்ட நீதிபதி சான்றிதழை வழங்குவார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
சான்றிதழ் வழங்கும் மருத்துவ வாரியத்திற்கு ஒரு தலைமை மருத்துவ அதிகாரி அல்லது துணைத் தலைமை மருத்துவ அதிகாரி தலைமை தாங்குவார் என்றும்,
அடையாளச் சான்றிதழின் அடிப்படையில் திருநங்கையர்கள் தங்களின் பிறப்பு சான்றிதழ் உள்ளிட்ட பிற ஆவணங்களில் உள்ள பெயரை மாற்றிக்கொள்ளும் உரிமையை பெறமுடியும் என தெரிவித்துள்ளார்.
மேலும், பிரதமர் மோடி தலைமையிலான அரசின் முயற்சியால் திருநங்கையர் சமூகத்திற்கு அதிகாரம் அளிப்பதற்கான திருத்தங்கள் கொண்டுவரப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் வீரேந்திர குமார் கூறியுள்ளார்.
















