உத்தர பிரதேசத்தில் ஜூஸ் கடை ஒன்றில் பொதுமக்களின் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் அழுகிய பழங்களைப் பயன்படுத்தி பழச்சாறு விற்பனை செய்யப்படுவது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
கோடைக்காலம் தொடங்கி உள்ளதால் நாடு முழுவதும் பொதுமக்கள் உடல் சூட்டை தணிக்கும் வகையில் தர்பூசணி, வெள்ளரிக்காய் போன்ற நீர்ச்சத்துள்ள உணவுகளை உட்கொண்டு வருகின்றனர்.
மேலும் பல்வேறு பழச்சாறுகளையும் பருகி வருகின்றனர்.
இந்நிலையில் உன்னாவோ பகுதியில் உள்ள டெல்லி ஜூஸ் ஷேக் என்ற கடையில் அழுகிய பழங்களைப் பயன்படுத்தி பழச்சாறு விற்பனை செய்யப்படுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த கடையில் பழச்சாறு தயாரிக்கப் பயன்படுத்தப்படும் பழங்கள் பெரும்பாலும் அழுகிய நிலையில் இருப்பதை அப்பகுதி மக்கள் கண்டறிந்துள்ளனர்.
பழச்சாறுக்கு அதிகளவில் பணம் வசூலிக்கும் நிலையில், அழுகிய பழங்களைக் கொடுப்பது எந்த வகையில் நியாயம் என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இது தொடர்பான காணொளிகள் மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
அதில் பழங்களின் மோசமான நிலை தெளிவாகத் தெரிவதால், பொதுமக்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
உணவுப் பாதுகாப்பு மற்றும் தரக் கட்டுப்பாட்டுத் துறை அதிகாரிகள் உடனடியாக இந்தக் கடையில் ஆய்வு நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
















