அருணாச்சல பிரதேசத்தின் தவாங் பகுதியில் பழைய இரும்பு பாலத்தை நவீனமான மற்றும் அழகான கஃபேவாக இந்திய ராணுவம் மாற்றியது சுற்றுலா பயணிகளை பெரிதும் கவர்ந்துள்ளது.
வடகிழக்கு இந்தியாவின் ரம்மியமான பகுதியாக விளங்கும் அருணாச்சல பிரதேசத்தின் தவாங் பகுதிக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருவது வழக்கம்.
தவாங் பகுதியில் பயன்பாட்டில் இல்லாத ஒரு பழைய பாலத்தைப் பிரிக்காமல், அதன் கட்டமைப்பை அப்படியே பயன்படுத்தி, இமயமலையின் இயற்கை அழகை ரசிக்கும் வகையில் ஒரு நேர்த்தியான உணவகமாக ராணுவம் மாற்றியுள்ளது.
இது “கழிவுப் பொருட்களிலிருந்து கலை” என்ற கருப்பொருளுக்குச் சான்றாக அமைந்துள்ளது. இந்திய ராணுவத்தின் ‘சத்பாவனா’ திட்டத்தின் கீழ் இந்த கஃபே உருவாக்கப்பட்டுள்ளது.
எல்லையோரப் பகுதிகளில் உள்ளூர் மக்களின் நலனுக்காகவும், நம்பிக்கையை வளர்க்கவும் ராணுவம் இத்தகைய சமூக மேம்பாட்டுத் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது.
இந்தக் கஃபேவின் மிக முக்கிய சிறப்பம்சம் என்னவென்றால், இது அப்பகுதியைச் சேர்ந்த மோன்பா இனப் பெண்களால் முழுமையாக நிர்வகிக்கப்படுகிறது.
பனி மூடிய மலைகளுக்கு நடுவே இந்த கஃபேவில் அமர்ந்து சூடான தேநீர் மற்றும் உள்ளூர் உணவுகளைச் சுவைப்பது ஒரு தனித்துவமான அனுபவமாக இருப்பதாக சுற்றுலா பயணிகள் தெரிவிக்கின்றனர்.
















