இந்தியா-சீனா எல்லை வர்த்தகத்தை மேம்படுத்தும் முயற்சியாக 6 ஆண்டுகளுக்குப் பிறகு உத்தரகாண்டில் உள்ள லிபுலேக் கணவாயை மீண்டும் திறப்பதற்கு இந்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. லிபுலேக் கணவாயின் முக்கியத்துவம் என்ன ? என்பது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
உத்தரகாண்ட்டில் பித்தோராகர் மாவட்டத்தின் ‘சந்த் பள்ளத்தாக்கில்’ (Chand Valley), அமைந்துள்ளது இந்த லிபுலேக் கணவாய் . கடல் மட்டத்திலிருந்து 17,000 அடி உயரத்தில் அமைந்துள்ள இந்த கணவாய் வழியாக 1954-ஆம் ஆண்டிலிருந்தே சீனாவுக்கு வர்த்தகம் தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில் 1962-ல் இந்தியா–சீனா போருக்குப் பின் பல ஆண்டுகளாக முற்றிலுமாக நிறுத்தப்பட்டிருந்தது. 1992-ல் மீண்டும் இந்த வழியான வர்த்தகம் இருநாடுகளுக்கும் இடையே தொடங்கியது.
இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலத்தையும் சீனாவின் திபெத் தன்னாட்சிப் பகுதியையும் இணைக்கும் இந்த கணவாய் நீண்ட காலமாகவே இந்தியா, சீனா, நேபாளம் ஆகிய மூன்று நாடுகளுக்கு இடையிலான எல்லைப் பிரச்சினையின் மையமாக இருந்து வருகிறது.
கூடுதலாக காலாபாணி மற்றும் லிம்பியாதுரா உள்ளிட்ட இப்பகுதி முழுமையும் தனது எல்லைக்குள்ளே வருவதாக உரிமை கோரும் நேபாளம், இந்த லிபுலேக் கணவாய் தொடர்பான இந்தியா–சீனா வர்த்தக ஒப்பந்தங்களையும் தொடர்ந்து எதிர்த்து வருகிறது.
2015-ல் இக்கணவாய் வழியாக நடைபெறும் வர்த்தகத்தை விரிவுபடுத்த இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகள் ஒப்புக்கொண்டதை நேபாளம் எதிர்த்து வருகிறது.
2020-ஆம் ஆண்டில், கைலாய மானசரோவர் யாத்திரைக்காக அமைக்கப்பட்ட புதிய சாலையை இந்தியா திறந்து வைத்ததையும் நேபாளம் கடுமையாக எதிர்த்தது.
இதற்கிடையே லிபுலேக் விவகாரத்தில் இந்தியாவுக்குச் சாதகமான நிலைப்பாட்டையே சீனா எடுத்துள்ளது. குறிப்பாக, 2023-ஆம் ஆண்டில் சீனா வெளியிட்ட அதிகாரப்பூர்வ வரைபடத்தில், சர்ச்சைக்குரிய இப்பகுதியை இந்தியாவின் நிலப்பகுதியாகவே காட்டியிருந்தது.
உண்மையான கட்டுப்பாட்டுக் கோட்டிற்கு மிக அருகில் அமைந்திருக்கும் லிபுலேக் கணவாய் பகுதியில் மேம்பட்ட சாலை உட்கட்டமைப்புக்களை இந்தியா உருவாக்கி உள்ளது. இது சீனாவைக் கண்காணிக்கவும், இராணுவப் படைகள் மற்றும் ஆயுத தளவாடங்களை எளிதாக நகர்த்தவும் உதவுகிறது.
கோவிட் காலத்தில் 2019-ல் இந்த கணவாய் மூடப்படுவதற்கு முன்பு 2018-ல் சுமார் 6.55 கோடி ரூபாய் மதிப்பிலான எல்லை தாண்டிய வர்த்தகம் நடைபெற்றது.
திபெத் மற்றும் சீனாவிலிருந்து 5.59 கோடி ரூபாய் மதிப்பிலான இறக்குமதியும் சுமார் 96.5 கோடி ரூபாய் மதிப்பிலான ஏற்றுமதியும் இந்தியா செய்தது.
இந்நிலையில், 6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த கணவாய் வழியான வர்த்தகத்துக்கு மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் No-Objection Certificate NOC வழங்கியுள்ளது.
இது தொடர்பாக உத்தரகாண்ட் மாநில தலைமைச் செயலாளர் ஆனந்த் பர்தனுக்கு மத்திய வெளியுறவுத் துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி எழுதியுள்ள ஒப்புதல் கடிதத்தில் மத்திய உள்துறை அமைச்சகம் மற்றும் வர்த்தகம் மற்றும் தொழில் அமைச்சகம் ஆகியவை வழங்கியுள்ள ஒப்புதல்களையும் இணைத்துள்ளார்.
மத்திய அரசின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றி, வழக்கமாக ஜூன் முதல் செப்டம்பர் வரை நடைபெறும் வர்த்தக காலத்துக்கான முன்னேற்பாடுகள் தொடங்கப்பட்டுள்ளதாக அம்மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ் பட்ஹாய் தெரிவித்துள்ளார்.
நாட்டின் வெளியுறவுக் கொள்கையில் எடுக்கப்பட்ட இன்னொரு நல்ல முடிவு இது என்று வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.
















