காங்கிரஸ் கட்சியின் நலன் முழுவதும் சமரசம் செய்யப்பட்டுவிட்டதாக அக்கட்சியின் எம்.பி ஜோதிமணி வேதனை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், காங்கிரஸ் கட்சியின் தொகுதித் தேர்வில் எவ்வித வெளிப்படைத் தன்மையும் இல்லை என குற்றச்சாட்டு முன்வைத்துள்ளார்.
வெளிப்படைத்தன்மையோடு, விரிவான விவாதத்திற்குப் பின்பே, தொகுதி தேர்வு செய்யப்படவேண்டும் என்ற தங்கள் கருத்தை பொறுப்பாளர்கள் ஏற்கவில்லை என குறிப்பிட்டுள்ள அவர்,
அனைத்தும் மிக ரகசியமான முறையில் நடைபெற்றதாகவும், காங்கிரஸ் கட்சியின் நலன் முழுவதும் சமரசம் செய்யப்பட்டுவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், உண்மையான கட்சி தொண்டர்களின் ஆண்டாண்டு கால உழைப்பை, கட்சிக்காக சிறு துரும்பைக்கூட கிள்ளிப்போடாத சிலர் விற்றுத்தின்பதைப் பார்க்க வேதனையாக உள்ளதாக தெரிவித்துள்ள ஜோதிமணி, பொறுப்பாளர்கள், மாநிலத் தலைவர் மட்டும் கட்சியல்ல எனவும், லட்சக்கணக்கான தொண்டர்களின் உணர்வும், உழைப்புமே கட்சி என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன் இதே விற்பனை அணுகுமுறையோடு வேட்பாளர் தேர்வும் நடக்கும் பட்சத்தில், தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியை யாராலும் காப்பாற்ற முடியாது எனவும் எம்.பி ஜோதிமணி தெரிவித்துள்ளார்.
















