பிரதமர் மோடி குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாக தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் மீது, வழக்குப்பதிவு செய்ய உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய ‘எப்ஸ்டீன் ஃபைல்ஸ்’ விவகாரத்தில், பிரதமர் மோடியின் பெயர் இடம் பெற்றுள்ளதாக தனது முகநூல் பக்கத்தில் தவறான வீடியோவை வெளியிட்டதாக அமைச்சர் மனோ தங்கராஜ் மீது குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த வீடியோ முற்றிலும் போலியானது என ‘ஆல்ட் நியூஸ்’ போன்ற உண்மை கண்டறியும் அமைப்புகள் ஏற்கனவே நிரூபித்துள்ளன.
இந்நிலையில், தகவல் தொழில்நுட்பத்தைத் தவறாகப் பயன்படுத்தி, உண்மைக்குப் புறம்பான தகவல்களைப் பரப்பிய அமைச்சர் மீது வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட வேண்டுமென தூத்துக்குடி வடக்கு மாவட்ட பாஜக வழக்கறிஞர் பிரிவு தலைவர் நீதிபாண்டியன் வழக்கு தொடர்ந்தார்.
இது குறித்த விசாரணையில், இந்த விவகாரம் தொடர்பாக ஆதராங்களை தாக்கல் செய்ய மனுதாரருக்கு சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகவில்லை என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதை பதிவு செய்துகொண்ட நீதிபதி, மனுதாரர் உடனடியாக காவல்துறை விசாரணை அதிகாரி முன் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை 2 வாரத்திற்கு ஒத்தி வைத்தார்.
















