தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் விற்பனை அணுகுமுறையோடு நடைபெறுவதாக அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி குற்றம் சாட்டியுள்ளார். உட்கட்சி பூசலுக்கு பெயர் போன காங்கிரஸ் கட்சியில் வேட்பாளர் தேர்வில் நடைபெறும் குளறுபடிகளும், காங்கிரஸ் கட்சியின் தொண்டர்கள் மத்தியில் எழுந்திருக்கும் அதிருப்தியையும் இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்..
காங்கிரஸ் என்றால் உட்கட்சி பூசல்…. உட்கட்சி பூசல் என்றால் காங்கிரஸ் கட்சி தான் என்பது நாடே அறிந்த உண்மை. தொண்டர்களை விட தலைவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் தமிழக காங்கிரஸ் கமிட்டியிலும் உட்கட்சி பூசலுக்கு பஞ்சமே இல்லை என்று சொல்லும் அளவுக்கு அக்கட்சிக்குள் களேபரம் நடந்து கொண்டிருக்கிறது.
கூடுதல் தொகுதிகளை ஒதுக்கவில்லை எனில் தமிழக வெற்றிக்கழகத்துடன் கூட்டணிக்கு சென்றுவிடுவோம் என மிரட்டி நீண்ட இழுபறிக்கு பிறகு திமுக கூட்டணியில் 28 தொகுதிகளை காங்கிரஸ் கட்சி கேட்டுப்பெற்றுள்ளது. தொகுதிகளை உறுதி செய்வதிலேயே ஏற்பட்ட பிரச்னை சரி செய்யப்படாத நிலையில் தற்போது அந்த தொகுதிகள் விற்பனை செய்யப்படுவதாக சொந்தக் கட்சியைச் சார்ந்த நாடாளுமன்ற உறுப்பினரான ஜோதிமணி முன்வைத்திருக்கும் புகார் பூதாகரமாகியுள்ளது.
தமிழக காங்கிரஸ் கமிட்டியின் இன்னாள், முன்னாள் தலைவர்கள் மற்றும் முக்கியத் தலைவர்களுக்கு கோட்டா நடைமுறை இருப்பதாக கூறப்படுகிறது.
அந்த கோட்டாவின் அடிப்படையில் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் தொகுதிகள் ஒதுக்கப்படும் நிலையில் சிலர் தாங்களோ அல்லது தங்களின் வாரிசுகளுக்கோ அந்த தொகுதிகளை கேட்டுப்பெறுகின்றனர். சிலர் அந்த தொகுதியை செல்வந்தர்கள் சிலரிடம் பெரிய தொகைக்கு விற்பனை செய்து பணம் பார்த்துக் கொள்வதாகவும் விமர்சனம் உள்ளது.
இந்த நிலையில் காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி வைத்திருக்கும் குற்றச்சாட்டு காங்கிரஸ் கட்சி மீதான விமர்சனங்களை வலுப்படுத்தும் வகையில் அமைந்திருக்கிறது.
காங்கிரஸ் கட்சியின் தொகுதித் தேர்வில் எந்தவித வெளிப்படைத்தன்மையும் இல்லை எனவும், வெளிப்படைத் தன்மையோடு, விரிவான விவாதத்திற்குப் பின்னரே தொகுதி தேர்வு செய்யப்பட வேண்டும் என்ற தங்களின் கருத்தை பொறுப்பாளர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என ஜோதிமணி குற்றம்சாட்டியுள்ளார்.
உண்மையான காங்கிரஸ் கட்சி தொண்டர்களின் ஆண்டாண்டு கால உழைப்பை, தமிழ்நாடு காங்கிரஸ் கட்சிக்காக ஒரு சிறு துறும்பைக் கூட்ட கிள்ளிப்போட்டிராத சிலர் விற்றுத் திண்பது வேதனையாக இருப்பதாக செல்வப்பெருந்தகை மீது கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.
இதே விற்பனை அணுகுமுறையோடு தான் வேட்பாளர் தேர்வும் நடக்குமேயானால் தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியை யாராலும் காப்பாற்ற முடியாது என கொந்தளித்திருக்கும் ஜோதிமணி, வேட்பாளர் பட்டியல் வெளியான பிறகு பேசலாம் என ஒரு குண்டையும் தூக்கி போட்டுள்ளார்.
திமுகவுடனான கூட்டணிப் பேச்சுவார்த்தையில் தொடங்கி தொகுதிப்பங்கீடு, வேட்பாளர் தேர்வு என குளறுபடிகளும் குழப்பங்களுமே காங்கிரஸ் கட்சியை முழுமையாக ஆக்கிரமித்திருக்கின்றன. ஏப்ரல் 30 ஆம் தேதி வேட்புமனுவுக்கான கால அவகாசம் தொடங்கவிருக்கும் நிலையில் தற்போதுவரை வேட்பாளர்களை இறுதி செய்ய முடியாமல் தவித்துக் கொண்டிருக்கும் காங்கிரஸ் கட்சி மீது அக்கட்சியில் இருக்கும் சொற்ப அளவிலான தொண்டர்களுக்கும் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
காங்கிரஸ் எம் பி ஜோதிமணியின் ஆதங்கப் பதிவின் பின்னூட்டத்தில் காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த தொண்டர்கள் பலர் செல்வபெருந்தகை மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். ஏற்கனவே ஒருமுறை செல்வப்பெருந்தகையின் மீது ஜோதிமணி கொடுத்த புகார் முடித்து வைக்கப்பட்ட நிலையில், தற்போது வைத்திருக்கும் குற்றச்சாட்டு காங்கிரஸ் கட்சிக்குள்ளாக மட்டுமல்ல திமுகவின் ஒட்டுமொத்த கூட்டணிக்குள்ளும் மிகப்பெரிய குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
















