சட்டமன்றத் தேர்தலில் சேந்தமங்கலம் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள சந்திரசேகரன், தனக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பளித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்தார்.
நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் தொகுதி அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள சந்திரசேகரனை கட்சியின் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் நேரில் சந்தித்து வாழ்த்து கூறினர்.
இதன் பின் செய்தியாளர்களை சந்தித்த சந்திரசேகரன், எடப்பாடி பழனிசாமி ஆட்சிக் காலத்தில், சேந்தமங்கலம் – காளப்பநாயக்கன்பட்டி பகுதிகளில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க சுமார் 200 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புறவழிச்சாலை அமைத்தது போன்ற பல்வேறு வரலாற்றுச் சிறப்புமிக்க திட்டங்கள் செயல்படுத்தப்பட்டதாக தெரிவித்தார்.
மேலும், சட்டம் – ஒழுங்கை மேம்படுத்தி, பொதுமக்கள் அச்சமின்றி நிம்மதியாக வாழத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று உறுதியளித்த அவர், வெற்றி பெற்ற பிறகு, மூன்று மாதங்களுக்கு ஒருமுறை ஒவ்வொரு கிராமத்திற்கும் நேரில் சென்று மக்களின் குறைகளைக் கேட்டறிந்து, அவற்றுக்கு உடனடித் தீர்வு காண முன்னுரிமை அளிக்கப்படும் என்று தெரிவித்தார்.
















