திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியில் தேர்தல் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த பறக்கும் படை அதிகாரிகள், கடமையை மறந்து வாகனத்திலேயே ஆழ்ந்து உறங்கிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 23-ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. வாக்காளர்களுக்குப் பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் விநியோகிப்பதை தடுக்கத் தேர்தல் ஆணையம் கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
ஒவ்வொரு தொகுதியிலும் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபட, சுழற்சி முறையில் பறக்கும் படை அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட திருப்பத்தூர் – தருமபுரி நெடுஞ்சாலையில், பறக்கும் படை அலுவலர் ஆதவன் தலைமையிலான குழுவினர் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
ஆனால், 8 மணி நேர பணியைக் கூட முழுமையாக செய்யாமல், சாலையோரம் வாகனத்தை நிறுத்திவிட்டு அதிகாரிகள் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் மூழ்கினர்.
இது குறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், அதிகாரிகள் இப்படிப் பொறுப்பற்ற முறையில் தூங்கினால், பண பட்டுவாடாவை எப்படி தடுக்க முடியும் என பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
















