கோவில்பட்டி அருகே உள்ள அரசு பள்ளியில் பறக்கும் படை அதிகாரிகள் நடத்திய சோதனையின் விவரத்தை அளிக்க கோரி வட்டாட்சியரை காரை முற்றுகையிட்டு அரசியல் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பதற்றம் நிலவியது.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே நாலாட்டின்புதூரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் வாக்காளர்களுக்கு கொடுக்க பணம் மற்றும் பரிசுப் பொருள்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக தேர்தல் பறக்கும்படை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இதனிடிப்படையில், பள்ளியின் தலைமை ஆசிரியை வரவழைத்து தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
5 மணி நேர சோதனைக்கு பிறகு வெளியே வந்த வட்டாட்சியரிடம் சோதனை குறித்த விவரங்களை தெரிவிக்குமாறு அதிமுக, திமுக, தவெக உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இருப்பினும், பதல் கூறாமல் சென்ற அதிகாரியின் காரை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். உடனடியாக, அங்கிருந்த காவல்துறையினர் அரசியல் கட்சியினருடன் பேச்சுவார்த்தை நடத்தி விவரங்களை வழங்க மாவட்ட ஆட்சியர் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இதனால், அந்த பகுதியில் சிறிது நேரம் பதற்றமான சூழல் நிலவியது.
















