தஞ்சாவூர் திலகர் திடலில் நடைபெற்ற திமுக பரப்புரையின்போது தஞ்சை பெரிய கோயில் கோபுரம் முதலமைச்சர் ஸ்டாலின் பார்வையில் படாத வகையில் திரையிட்டு மறைத்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் திலகர் திடலில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டத்தில், முதலமைச்சர் ஸ்டாலின், மாவட்டத்திலுள்ள எட்டு தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து உரையாற்றினார் . பொதுக்கூட்டம் நடைபெறும் திலகர் திடல் அருகே, உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோயில் அமைந்துள்ளது. இந்நிலையில், கூட்ட மேடையிலிருந்து பார்த்தால் பெரிய கோயில் கோபுரம் தெரியாதவாறு, மிக நீண்ட மற்றும் உயரமான திரைகள் கொண்டு முழுமையாக மறைக்கப்பட்டிருந்தது அங்கிருந்த பொதுமக்களையும், சுற்றுலாப் பயணிகளையும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
தஞ்சை பெரிய கோயிலுக்குச் சென்றாலோ அல்லது அதன் நிழல் அரசியல்வாதிகள் மீது விழுந்தாலோ பதவி பறிபோய்விடும் என்ற ஒரு ‘சென்டிமென்ட்’ பல தசாப்தங்களாக தமிழக அரசியலில் நிலவி வருகிறது.
பகுத்தறிவு மற்றும் கடவுள் மறுப்பு கொள்கைகளை பேசும் திமுக, தற்போது முதலமைச்சரின் பதவிக்கு ஆபத்து வந்துவிடுமோ என்ற பயத்தில் இத்தகைய மூடநம்பிக்கைக்குத் துணையாகச் செயல்படுவதாக பல்வேறு தரப்பினரும் விமர்சித்து வருகின்றனர்.
















