நிலவை நோக்கித் தனது வரலாற்றுப் பயணத்தைத் தொடங்கிய ஆர்டெமிஸ் 2 விண்கலம் மீண்டும் பூமிக்குத் திரும்பும்போது, எந்தவொரு விண்வெளிப் பயணத்திலும் இல்லாத அளவுக்கு ஆபத்தைச் சமாளிக்க வேண்டும் என்று கூறப்படுகிறது.
அப்போலோ 17 திட்டத்துக்குப் பிறகு, சுமார் 50 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. மீண்டும் நிலவுக்கு மனிதர்களை அனுப்ப அமெரிக்காவின் நாசா திட்டமிட்டது. ‘ஆர்டெமிஸ் 2’ விண்கலத்தை நிலவுக்கு நாசா அனுப்பி உள்ளது.
இது வெறும் நிலவில் தரையிறங்கும் திட்டமல்ல. நிலவைச் சுற்றி விட்டு பத்து நாட்களில் பூமிக்குத் திரும்பும் வரலாற்றுச் சிறப்பு மிக்க பயணமாகும். இது வருங்காலத்தில் மனிதர்கள் நிலவில் தங்கி ஆராய்ச்சி செய்வதற்கு இந்த ஆர்டெமிஸ்-2 விண்கலப் பயணம் ஒரு முன்னோட்டமாக அமையும் என்று கூறப்படுகிறது.
சுமார் 23 லட்சம் கிலோமீட்டர் தூரம் கொண்ட இந்தச் சவாலான பயணத்தில், நிலவின் மறுபக்கத்துக்குச் சென்று அங்கிருந்து பூமியின் ஈர்ப்பு விசையைப் பயன்படுத்தி மீண்டும் திரும்புமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது.
2028-ல் நாசா திட்டமிடப்பட்டுள்ள நிலவின் தெற்குத் துருவத்தில் ஒரு நிரந்தரத் தளத்தைத் திறக்கும் ஆர்டெமிஸ் 3 திட்டத்துக்கு ஆர்டெமிஸ் 2 திட்டமே முதல் படியாகும்.
புவியின் தாழ் சுற்றுப்பாதையிலிருந்து திரும்பும் திட்டங்களைப் போலல்லாமல், ஓரியன் விண்கலம் சந்திரனின் தூரத்திலிருந்து திரும்புவதால் இவ்வளவு முக்கியமான இந்த திட்டத்தை மற்றவற்றிலிருந்து வேறுபடுத்துவதே இதில் உள்ள அதிவேகம்தான்.
அதாவது, மணிக்கு சுமார் 40,000 கிலோமீட்டர் வேகத்தில் பூமியின் வளிமண்டலத்தை இந்த விண்கலம் வந்து தாக்கும். இந்த அதீத வேகத்துடன், ஓரியன் விண்கலம் பூமியின் அடர்த்தியான வளிமண்டலத்தின் வழியே பசிபிக் பெருங்கடலில் விழுவதற்காக பாயும் போது, அதிக வெப்பத்தையும் ஆற்றலையும் வெளிப்படுத்தும் என்று கூறப்படுகிறது. விண்கலத்தின் முன்னால் உள்ள காற்று வேகமாக அழுத்தப்படுவதால், வெப்பநிலை கிட்டத்தட்ட 2,800 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும். இந்த வெப்பம் முதன்மையாக உராய்வினால் அல்ல அழுத்தத்தினால் உண்டாகும்.
இதனால் விண்கலன் முழுவதும் ஒரு தீப்பிழம்பு போன்ற அதிக வெப்பம் கொண்ட பிளாஸ்மாவை உருவாக்கும் இதைத் தாங்குவதற்காகவே, ஓரியன் விண்கலத்தில் ஒரு மேம்பட்ட வெப்பக் கவசம் உள்ளது.
இந்த கவசமே படிப்படியாக எரிந்து, அதிகப்படியான வெப்பத்தைத் தானே எடுத்துக் கொண்டு உள்ளே இருக்கும் விண்வெளி வீரர்களைப் பாதுகாக்கிறது.
மீண்டும் வளிமண்டலத்துக்குள் நுழையும் நேரத்தில் தகவல் தொடர்பு இழப்பு ஏற்படும் என்றும் அதை இருண்ட காலம் என்றும் அதிக வேகத்தில் பூமிக்குள் திரும்பும் ஆர்டெமிஸ் 2 மிகத் துல்லியமான கோணத்தில் நுழைய வேண்டும் என்றும் அது மிகவும் ஆபத்தானது நிமிடங்கள் என்று கூறப்படுகிறது.
மிகவும் செங்குத்தாக இருந்தால், வெப்பத்தால் ஆர்டெமிஸ் 2 எரிந்தே அழித்துவிடும் என்றும்,தாழ்வாக இருந்தால் வளிமண்டலத்திலிருந்து விண்கலம் விலகி மீண்டும் விண்வெளியில் தூக்கி வீசப் படும்.
இந்த மரண மண்டலத்தை வெற்றிகரமாக தாண்டி ஆர்டெமிஸ் 2 பூமிக்குத் திரும்பினால் விண்வெளிப் பயணங்களிலிருந்து மனிதர்கள் பாதுகாப்பாகத் திரும்ப முடியும் என்பதை நாசா நிரூபிக்கும்.
ஆர்டெமிஸ் 2 விண்கலத்தின் அனைத்து உயிர் காக்கும் அமைப்புகளும் சீராகச் செயல்பட்டு வருவதாக தெரிவித்துள்ள நாசா விஞ்ஞானிகளும் உலகம் முழுவதுமுள்ள விண்வெளி ஆய்வாளர்களும் பசிபிக் பெருங்கடலில் பத்திரமாகத் தரையிறங்கும் வரை ஆர்டெமிஸ் 2 வை கூர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
ஆர்டெமிஸ் 2 -ன் வெற்றி மனிதர்கள் நிலவில் தங்கிச் செவ்வாய் கிரகத்துக்குச் செல்வதற்கான வாய்ப்புகளைச் சாத்தியமாக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
















