தமிழ்நாட்டின் நாய் இனங்களான சிப்பிப்பாறை, ராஜபாளையம், கோப்பை, கன்னி ஆகியவற்றோடு வெளிநாட்டு நாய் இனங்களையும் ஒரே இடத்தில் பார்க்கும் வகையில் சென்னை மயிலாப்பூரில் நடைபெற்ற நாய்கள் கண்காட்சி பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
சென்னை மயிலாப்பூரில் உள்ள தனியார் பள்ளி மைதானம் ஒன்றில் செல்லப்பிராணிகளான நாய்களின் கண்காட்சி நடைபெற்றது. வெளிநாடு முதல் இந்தியா வரையிலான 60 மேற்பட்ட நாய் வகை இனங்கள், 408 மேற்பட்ட நாய்கள் இதில் பங்கேற்றன.

இந்த கண்காட்சியில் பெல்ஜியம் மெல்லினிஸ், டாபர்மேன், பீகில், ராட்வீலர், பொமேரியன், சைபீரியன், பிட்ஸ், கிரேட் டேன் உள்ளிட்ட வகைகளும், முதல் முறையாக தமிழ்நாட்டு இனங்களான ராஜபாளையம், சிப்பிப்பாறை, கன்னி, கோம்பை ஆகிய வகை இனங்களும் பங்கேற்றன. நாய்களின் குணாதிசயங்கள், கீழ்ப்படிதல், பராமரிப்பு, நடை, சிகை அலங்காரம் மற்றும் உடல் அமைப்பு ஆகிய அம்சங்களின் கீழ் பல்வேறு பிரிவுகளில் நடத்தப்பட்ட போட்டிகள் பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தியது.

இந்தியா, ருமேனியா, ரஷ்யா, ஆஸ்திரேலியா, நெதர்லாந்து, இந்தோனேஷியா ஆகிய நாடுகளை சேர்ந்த நடுவர்கள் இதில் பங்கேற்று வெற்றி பெற்ற நாய்களுக்கு பரிசுகளை வழங்கினர். தமிழ்நாட்டின் நாய் இனங்களான சிப்பிப்பாறை, ராஜபாளையம், கோப்பை, கன்னி உள்ளிட்ட நாய் இனங்களை உலக அளவில் அங்கீகரிக்கப்பட்ட நாய் இனங்களாக கொண்டு வருவதற்கான முயற்சியும் இந்த கண்காட்சி மூலம் நடைபெற்றுள்ளது. இந்தியாவின் நாட்டு நாய்களுக்கு உலக அளவில் அங்கீகாரம் பெறுவதே இத்தகைய நாய்க்கண்காட்சிகளை ஆண்டுதோறும் நடத்துவதற்கு முக்கிய காரணமாக இருந்துள்ளதாக ஏற்பட்டாளர்கள் தெரிவித்தனர்.

தமிழ்நாட்டின் தலைசிறந்த இனங்களான இவை, வேட்டைக்கு உதவுவது மட்டுமல்லாமல், வெளி நாட்டு இனங்களை விட நீண்ட ஆயுள் கொண்டது. அதிக செலவில்லாமல் மிகவும் குறைவான பராமரிப்பு மட்டுமே தேவைப்படும் நம் நாட்டு இனங்கள் உலக அளவில் பிரசித்தி பெற தொடங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டு நாய் இனங்களை உலக அங்கீகாரம் பெறுவதற்கு முயற்சி செய்யப்பட்டு வரும் அதே வேளையில், தமிழ்நாட்டில் உள்ள கால்நடை மருத்துவமனைகளில் வெளிநாட்டு இனங்களுக்கு இருப்பது போன்ற சிகிச்சை முறைகள் மற்றும் தடுப்பூசிகள் போன்றவை இல்லாதது வருத்தம் அளிப்பதாக உரிமையாளர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.

தமிழ்நாடு அரசிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் நாட்டு நாய்களுக்கு சிகிச்சை முறை மேம்படுத்தவில்லை, இதனால் கடந்த 10 வருடங்களில் மீட்டெடுக்கப்பட்ட நாட்டு நாய் இனங்கள் பாதுகாப்பதில் அரசின் உதவி இல்லாமல் உரிமையாளர்கள் சிரமப் படுவதாகவும் குற்றம் சாட்டுகின்றனர்.
இந்த கண்காட்சியில் இந்தியாவின் நாட்டு நாய்களோடு, ரஷ்யன் ப்ரீட் வகைகள், இங்கிலீஷ் ஷட்டர், ஜாக் டெரியர் வகை நாய்கள் காண்போரை வியப்பில் ஆழ்த்தின.
















