மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, கடந்த 14-ம் தேதி அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். பிறகு, நெஞ்சு வலி என்று கூறியதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு இதய அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. இதனிடையே, செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கை விசாரித்த 2 நீதிபதிகள் கொண்ட அமர்வு, செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்ததில் சட்ட விரோதம் இல்லை எனஅறும், சட்ட விரோதம் என்றும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியது. இதையடுத்து, இவ்வழக்கு 3-வது நீதிபதிக்கு மாற்றப்பட்டது. 3-வது நீதிபதி சட்ட விரோதம் இல்லை என்று தீர்ப்பளித்தார். இதை எதிர்த்து மேகலா உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார்.
இந்த மனு மீதான விசாரணை கடந்த 26, 27-ம் தேதிகளில் நடைபெற்ற நிலையில், தங்களது தரப்பில் மேலும் வாதம் செய்ய வேண்டி இருப்பதால், வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 1-ம் தேதிக்கு ஒத்தி வைக்கும்படி கேட்டுக் கொண்டனர். அதன்படி, நீதிபதிகள் உத்தரவிட்ட நிலையில், இன்று வழக்கு விசாரணைக்கு வந்தது.
செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான வக்கீல் முகுல் ரோத்தகி, “அமலாக்கத்துறை 5 நாட்களுக்கு மேல் போலீஸ் காவல் கோர அனுமதி இல்லை. மேலும், செந்தில் பாலாஜியின் உடல்நிலை தற்போதுதான் தேறி வருகிறது. ஆகவே, ஒரு நாளில் அவரிடம் சிறிது நேரம் மட்டுமே விசாரிக்கலாம் என்று வாதத்தை முன்வைத்தார்.
இதையடுத்து, அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, தனது வாதங்களை முன்வைக்க நாளை 1 மணி நேரம் அவகாசம் வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், செந்தில் பாலாஜி வழக்கில் இரு தரப்பு வாதங்களையும் நாளைக்குள் முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.