இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைந்ததை ஒட்டி, என் மண் என் தேசம் என்கிற புதிய இயக்கம் தொடங்கப்படும் என்று பிரதமர் மோடி கூறியிருக்கிறார்.
பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை ‘மன் கி பாத்’ (மனதின் குரல்) என்கிற பெயரில் வானொலி மூலம் நாட்டு மக்களிடையே உரையாற்றி வருகிறார். அதன்படி, கடந்த 30-ம் தேதி நடந்த மனதின் குரல் நிகழ்ச்சியில் பேசிய மோடி, “இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைந்திருக்கிறது. இதை நாம் சுதந்திர பெருவிழாவாக கொண்டாடி வருகிறோம். இதன் ஒரு பகுதியாக, ஆகஸ்ட் 15-ம் தேதி மேலும் ஒரு புதிய இயக்கம் தொடங்கப்பட இருக்கிறது. இந்த இயக்கம் நாட்டுக்காக உயிர்த்தியாகம் செய்த வீரர்களின் நினைவாக ‘என் மண், எண் தேசம்’ என்று அழைக்கப்படும்.
இந்த இயக்கத்தின் மூலம், நாடு முழுவதும் உயிர்த்தியாகம் செய்த வீரர்களை போற்றும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்படும். மேலும், அமுத கலச யாத்திரை நடத்தப்பட்டு, நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் 7,500 சிறிய அளவிலான கலசங்களில் மண் நிரப்பப்பட்டு, யாத்திரை டெல்லியை வந்தடையும். இந்த கலசங்களுடன் மரக்கன்றுகளும், செடிகளும் எடுத்து வரப்பட்டு, கலசங்களில் உள்ள மண் டெல்லி தேசிய போர் நினைவிடத்துக்கு அருகே கொட்டப்பட்டு, மரக்கன்றுகள் நட்டு வைக்கப்படும். பின்னர், அந்த இடத்தில் அமுத பூங்காவனம் அமைக்கப்படும்.
இது ஒரே பாரதம் உன்னத பாரதத்தின் அடையாளமாக இருக்கும்.
அதேபோல, தேசத்தை வளர்ந்த நாடாக்கும் இலக்கு, அடிமைத்தனத்தை வேரறுப்பது, பாரம்பரிய பெருமிதம், ஒற்றுமையின் பலம், கடமையை நிறைவேற்றுதல் உள்ளிட்ட அடுத்த 25 ஆண்டுகளுக்கான 5 உறுதிமொழிகள் குறித்து கடந்த சுதந்திர தினத்தின்போது செங்கோட்டையில் பேசினேன். இதை ‘என் மண், என் தேசம்’ இயக்கத்தில் பங்கேற்கும் அனைவரும் சபதமாக ஏற்க வேண்டும். தேசத்தின் புனித மண்ணை கைகளில் ஏந்தி சபதம் ஏற்கும்போது செல்ஃபி புகைப்படம் எடுத்து yuva.gov.in இணையத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். மேலும், கடந்தாண்டு சுதந்திர தினத்தை போலவே நிகழாண்டும் ஒவ்வொரு வீட்டிலும் மூவர்ணக் கொடியை ஏற்றுங்கள். இந்த பாரம்பரியத்தைத் தொடர்ந்து முன்னெடுத்து செல்ல வேண்டும். இதன் மூலம், நமது கடமைகளை உணர்ந்து நாட்டின் சுதந்திரத்துக்காக உயிர்த்தியாகம் செய்த வீரர்களை நினைவு கூற முடியும். சுதந்திரத்தின் மதிப்பையும் நம்மால் உணர்ந்து கொள்ள முடியும்” என்று பிரதமர் மோடி கூறியிருக்கிறார்.