நாடு முழுவதும் இன்று 76-வது சுதந்திர தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. பல பிரபலங்களும் தங்களது சுதந்திர தின வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் இந்தியக் கிரிக்கெட் வீரர் விராட் கோலி தனது எக்ஸ் (டுவிட்டர்) பக்கத்தில் சுதந்திர தின வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
அதில், ‘அனைவருக்கும் இனிய சுதந்திர தின வாழ்த்துகள். ஜெய்ஹிந்த்’ என பதிவிட்டுள்ளார்.
சமீபத்தில் விராட் கோலி சுதந்திர தினத்தின் முக்கியத்துவம் குறித்து அளித்த பேட்டியில், ‘சுதந்திர தினம் நம் நாட்டின் வரலாற்றில் மிக முக்கியமான நாள் ஆகும். ஆகஸ்டு 15ஆம் தேதி என்னுடைய தந்தையின் பிறந்த நாள். மேலும் பல உணர்வுகள் இந்த நாளுடன் இணைக்கப்பட்டுள்ளன. நம் நாடு சுதந்திரம் அடைந்த பிறகு புரிந்த சாதனைகளை நினைத்து பெருமையாக உணர்கிறேன். மேலும் பெரும்பாலான சுதந்திர தினங்களில், நான் போட்டிகளில் விளையாடியிருக்கிறேன் அல்லது தேசிய கொடியை ஏற்றியுள்ளேன். அதில் தேசிய கீதம் இசைக்கப்படுவது பெருமைக்குரிய தருணமாக இருக்கும்’ என கூறியுள்ளார்.
Happy Independence Day to all. Jai Hind. 🇮🇳
— Virat Kohli (@imVkohli) August 15, 2023
மேலும் அவர், ‘சுதந்திர தினத்தில் எனக்கு பல இனிமையான நினைவுகள் உள்ளன. என்னுடைய மாநிலமான டெல்லியில் சுதந்திர தினம் அன்று பட்டம் விடுவதை கலாசாரமாக கொண்டுள்ளனர்.
நான் சிறு வயதில் வளரும் பருவத்தில் எனக்கு அது மிக சிறப்பு வாய்ந்த ஒன்று. எங்கள் வீட்டில் ஒருநாள் முன்பே பட்டம் செய்து விடுவோம். அதனை சுதந்திர நாள் அன்று பறக்க விடும்போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். பொதுவாக சுதந்திர தினத்தன்று டெல்லியில் காற்று அதிகமாக வீசும்’ என தனது சிறுவயது கொண்டாட்டங்களை நினைவு கூர்ந்து பேசியுள்ளார்.