இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரம் இராமநாதசுவாமி கோவில் காசிக்கு நிகரான உலக பிரசித்தி பெற்ற புண்ணிய ஸ்தலமாகவும், தீர்த்தம், மூர்த்தி, ஸ்தலம் என முப்பெருமைகளையும் கொண்டது. ஆடி அமாவாசை முன்னிட்டு இன்று, இராமநாதசுவாமி கோவில் அக்னி தீர்த்தம் கடற்கரையில் தங்களுடைய முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் கொடுக்க லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.
ஆடி அமாவாசையில் பொதுமக்கள் தங்களுடைய முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தால் அது அவர்களைச் சென்றடைகிறது. அதன்படி ஆடி அமாவாசையான இன்று மேட்டூர் அணையின் அடிவாரம் காவிரி ஆற்றில் படித்துறையில் பொதுமக்கள் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.
பின்னர் தங்களது மூதாதையர்களின் பெயர்களைக் கூறி, பச்சரிசி மாவு, எள், வாழைப்பழம் உள்பட பல்வேறு பொருட்களைப் படையலிட்டு வழிபாடு நடத்தினார்கள். தர்ப்பண பொருட்களை ஆற்றில் கரைத்து, புனித நீராடி முன்னோர்களை வழிபட்டனர்.
மேலும் திருவள்ளூர் வீரராகவர் கோவிலில், இன்று அதிகாலை முதலே கோவில் குளக்கரை மற்றும் காக்களூரில் உள்ள பாதாள விநாயகர் கோவில் அமைந்துள்ள ஏரிக்கரையில் ஏராளமான பக்தர்கள் தங்களது முன்னோர்களுக்குத் தர்ப்பணம் கொடுத்தனர்.
மேலும் , திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் பக்தர்கள் தங்கள் முன்னோர்களின் ஆன்மா சாந்தியடைய தர்ப்பணம் கொடுத்தனர். மூதாதையர்களின் பெயர்களைக் கூறி வேத மந்திரங்களை ஓதினர். தங்கள் முன்னோர்களை நினைத்தும், அவர்களின் ஆசி வேண்டியும் வழிபட்டனர்.
இதேபோல் திருச்சி அய்யாளம்மன் படித்துறை, ஓடத்துறை, தில்லைநாயகம் படித்துறை, முக்கொம்பு உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் ஆடி அமாவாசை தினத்தையொட்டி இன்று பக்தர்கள் முன்னோர்களுக்குத் தர்ப்பணம் கொடுத்தனர்.
கங்கை நதிக்கு ஒப்பாக கருதப்படும் நெல்லை தாமிரபரணி நதியில் அமாவாசை நாளில் பாபநாசம் பாபநாசநாதர் சுவாமி கோவில் முன்பு உள்ள படித்துறையில் அமர்ந்து வாழை இலையில் அரிசி மாவால் பிண்டம் பிடித்து, வாழைப்பழம், வெற்றிலை, ஊதுபத்தி ஆகியவற்றை படைத்து சிறப்பு வழிபாடு நடத்தினர். பின்னர் அந்த பிண்டத்தை தாமிரபரணி ஆற்றில் கரைத்தனர்.
நெல்லை மாநகர பகுதியில் டவுன் குறுக்குத்துறை, கொக்கி ரகுளம், வண்ணார்பேட்டை பேராத்து செல்வி அம்மன் கோவில் படித்துறை, குட்டத்துறை முருகன் கோவில் படித்துறை, அருகன்குளம் ஜடாயு தீர்த்தம் உள்ளிட்ட இடங்களில் பொதுமக்கள் தாமிரபரணி நதியில் நீராடி, பின்னர் தர்ப்பணம் கொடுத்து சென்றனர்.
இந்தியாவின் தென்கோடி முனையில் அமைந்துள்ள புண்ணிய தலமான கன்னியாகுமரியில் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் ஆடி அமாவாசையான இன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தார்கள். தென்காசி மாவட்டத்தில், குற்றாலத்தில், குற்றாலம் அருவி கரையில் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். தூத்துக்குடி மாவட்டத்தில் திருச்செந்தூர் கடற்கரையில் இன்று அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.
இதேபோல இன்று தமிழகத்திலுள்ள கடற்கரை, குளம், ஆறுகள், உள்ளிட்ட நீர்நிலைகளில் பொதுமக்கள் தங்கள் முன்னோர்களுக்குத் திதி கொடுத்து வழிபாடு செய்தனர்.