தமிழகம் மற்றும் புதுச்சேரியில், 100க்கும் மேற்பட்ட இடங்களில், பரவலாக மழை பெய்துள்ளது. இந்த மழை, இன்னும் ஐந்து நாட்களுக்கு தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை மிதமாக பெய்து வருகிறது. இதனால் நேற்று காலை நிலவரப்படி, 24 மணி நேரத்தில், மாநிலம் முழுதும், 100க்கும் மேற்பட்ட இடங்களில், லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்துள்ளது.
இதனிடையே, சென்னையின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு முதல் பலத்த மழைப் பெய்தது. இந்த நிலையில், தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 4 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களுக்கு அடுத்த 3 மணி நேரத்துக்கு இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வுமையம் தகவல் தெரிவித்துள்ளது.
தென் தமிழகத்தில் அதிகபட்சமாக, சிவகாசி, திருத்தணி, அரக்கோணம், ஆர்.கே.பேட்டை, மாயனுார், கிருஷ்ணராயபுரம், திருத்தணி, நத்தம், விருதுநகர், சென்னை விமான நிலையம், ஊத்துக்கோட்டை, ஆண்டிப்பட்டி, வாடிப்பட்டி, உசிலம்பட்டி, கொரட்டூர், சோளிங்கர், வாலாஜா, மீனம்பாக்கம், அம்மூர், ராணிப்பேட்டை ஆகிய இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழைப் பதிவாகியுள்ளது.
இந்நிலையில், ‘தமிழகப் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
அதனால், தமிழகம், புதுச்சேரியில், இன்னும் ஐந்து நாட்களுக்கு மிதமான மழைப் பெய்யும் எனவும் சென்னையில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது’ என, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.