மத்தியப் பிரதேச மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டிருக்கிறது. 3 சட்டமன்ற உறுப்பினர்கள் புதிதாக அமைச்சர்களாக பதவியேற்றிருக்கிறார்கள்.
மத்தியப் பிரதேச மாநிலச் சட்டமன்றத்தின் பதவிகாலம் இந்தாண்டு இறுதியில் முடிவடைய உள்ளது. இதையடுத்து, நவம்பர் மாதத்திற்குள் இம்மாநிலத்துக்கு சட்டமன்றத் தேர்தல் நடத்தப்படவிருக்கிறது. தேர்தலை முன்னிட்டு பா.ஜ.க., காங்கிரஸ் ஆகிய கட்சிகள் பிரசாரத்தைத் தொடங்கி விட்டன. சமீபத்தில் மத்தியப் பிரதேசத்துக்குச் சென்ற பிரதமர் நரேந்திர மோடி, நலத்திட்டப் பணிகளை தொடங்கி வைத்ததோடு, பல்வேறு திட்டப் பணிகளுக்கும் அடிக்கல் நாட்டினார். அரசியல் கட்சிகள் தங்களது வேட்பாளர் பட்டியலை விரைவில் வெளியிட தயாராகி வருகின்றன.
இந்த நிலையில், மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சௌஹான், மாநில அமைச்சரவையை விரிவாக்கம் செய்திருக்கிறார். புதிதாக பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர்கள் 3 பேரை அமைச்சர்களாக நியமித்திருக்கிறார். அதன்படி, ராஜேந்திர சுக்லா, கௌரிசங்கர் பிசேன், ராகுல் லோதி ஆகியோர் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர். இவர்களுக்கு அம்மாநில ஆளுநர் மங்குபாய் பட்டேல் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இதன் மூலம் மத்தியப் பிரதேச அமைச்சர்களின் எண்ணிக்கை 34 ஆக உயர்ந்திருக்கிறது.
இவர்களில் ராஜேந்திர சுக்லா முன்னாள் அமைச்சர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர், ரெவா தொகுதியில் இருந்து 4 முறை சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். அதேபோல, கவுரிசங்கர் பிசேன் பாலகாட் தொகுதியில் இருந்து 7 முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர். அதேசமயம், ராகுல் லோதி முதல் முறையாக கார்காபூர் தொகுதியில் இருந்து சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.