ஆதித்யா எல் 1 விண்ணில் செலுத்துவதற்கான கவுண்ட்டவுன் நாளை தொடங்குகிறது.
சூரியனை ஆய்வு செய்ய, ஆதித்யா எல் 1 என்ற விண்கலம் முற்றிலும் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டது. இந்த விண்கலம், செப்டம்பர் 2-ம் தேதி காலை 11:50 மணிக்கு ஆந்திர பிரதேச மாநில ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி-சி57 (PSLV-C57) ஏவுகணை மூலம் ஏவப்படும் என இஸ்ரோ அதிகாரபூர்வமாக அறிவித்தது.
விண்வெளியில் சூரியனை ஆராயும் ஆதித்யா எல்-1 விண்கலம் சூரியனை அடைவதற்கு சுமார் 125 நாட்களுக்கும் மேல் ஆகும். சூரியனுக்கு விண்கலன் அனுப்பும் திட்டம் இதுவரை இந்தியாவில் மேற்கொள்ளப்படவில்லை என்பதால் இது இந்தியாவிற்கே ஒரு புது முயற்சியாகும்.
இந்நிலையில், செப்டம்பர் 2-ம்தேதி விண்ணில் செலுத்துவதற்கான 24-மணி நேர கவுண்ட்டவுன் செப்டம்பர் 1 (நாளை), காலை 11:50 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் தொடங்குகிறது.
இந்நிலையில், விண்ணில் பாய தயார் நிலையில் உள்ள ஆதித்யா எல்-1 புதிய புகைப்படங்களை இஸ்ரோ வெளியிட்டது. மேலும், ‘விண்ணில் செலுத்துவதற்கான சோதனைகள் அனைத்தும் வெற்றிகரமாக நிறைவு செய்யப்பட்டது. விண்கலம் பூமியில் இருந்து சூரியனின் எல் 1 (லெக்ராஞ்சியன் புள்ளி) நிலைநிறுத்தப்பட உள்ளது’ என இஸ்ரோ கூறியுள்ளது.