சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று கூறிய, தி.மு.க. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று முஸ்லீம் மதகுருக்கள் வலியுறுத்தி இருக்கிறார்கள்.
தமிழகத்தில் நடந்த, இடதுசாரி அமைப்பின் மாநாட்டில், கலந்துகொண்ட, தமிழக முதல்வர் ஸ்டாலின் மகனும், தி.மு.க. அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று பேசியிருந்தார். இவரது பேச்சு, இந்துக்கள் மட்டுமல்லாது, அனைத்து மதத்திலும் உள்ள, ஆன்மிக மக்களிடையே, கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, இந்து மதகுருமார்கள் உட்பட பல்வேறு தரப்பினரும் உதயநிதிக்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், முஸ்லீம் மதகுருமார்களும் உதயநிதிக்கு கண்டனம் தெரிவித்திருக்கின்றனர். இதுகுறித்து உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஷியா – சன்னி உலமா முன்னணியின் பொதுச் செயலாளரும், ஷியா பிரிவு மூத்த மதகுருவுமான மவுலானா ஹபீப் ஹைதர், அனைத்திந்திய முஸ்லீம் ஜமாத் மவுலானா அமைப்பின் தலைவர் ஷாபுதீன் ரிஸ்வி மற்றும் சன்னி பிரிவின் மதகுரு அபு ஷஃபார் நோமானி ஆகியோர் நேற்று கூட்டாக ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
அந்த அறிக்கையில், “உலகின் மிகப் பழமையான மதங்களில் ஒன்றான, ஹிந்து மதம் குறித்து, தரக்குறைவான கருத்தை தெரிவித்த, அமைச்சர் உதயநிதி பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும். மக்களின் உணர்வுகளை புண்படுத்த யாருக்கும் உரிமை இல்லை. இவ்விவகாரம் தொடர்பாக, I.N.D.I.A. கூட்டணியினர் தங்களது நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டும். உதயநிதியின் இந்த பேச்சு, மத அடிப்படையில், மக்களை பிளவுபடுத்துகிறது. மக்களை ஒன்றுபடுத்தத்தான், மதங்கள் இருக்கின்றனவே தவிர, ஜாதி அடிப்படையில், அவர்களை பிரிப்பதற்கு அல்ல. பொறுப்புள்ள பதவியில் இருப்பவர், நாட்டின் சட்டம் ஒழுங்குக்கு, அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில், கருத்துக்களை தெரிவிக்கக் கூடாது” என்று கூறியிருக்கின்றனர்.