சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று கூறிய தி.மு.க. அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு, இலக்கியவாதியும், சமய பேச்சாளருமான இலங்கை ஜெயராஜ், உரலார், உலக்கையார் பாணியில் வித்தியாசமாக பதிலடி கொடுத்திருக்கிறார்.
தமிழகத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நடந்த, இடதுசாரி அமைப்பின் மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய முதல்வர் ஸ்டாலின் மகனும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று பேசியிருந்தார். இவரது பேச்சு தமிழகம் மட்டுமல்லாது உலகம் முழுவதும் இருக்கக் கூடிய, இந்துக்கள், இந்து அமைப்புகள் மற்றும் ஆன்மிக அன்பர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
உதயநிதிக்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த சாமியார் ஒருவர் உதயநிதியின் தலைக்கு 10 கோடி ரூபாய் விலை வைத்திருக்கிறார். இது தவிர, உதயநிதி மீது அம்மாநிலத்தில் வழக்கும் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. மேலும், உதயநிதி மீது நீதிமன்றம் தாமாக முன்வந்து நடவடிக்கை எடுக்கக் கோரி, முக்கியப் பிரமுகர்கள் ஏராளமானோர் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு கடிதம் அனுப்பி இருக்கிறார்கள்.
இந்த நிலையில், உதயநிதிக்கு இலங்கையைச் சேர்ந்த இலக்கியம் மற்றும் சமயப் பேச்சாளரான கம்பவாரிதி ஜெயராஜ், உரலார்… உலக்கையார்… சல்லடையார் பாணியில், வித்தியாசமாக பதிலடி கொடுத்திருக்கிறார்.
உரலார் கேள்வி: சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும் என்கிறார்களே?
உலக்கையார் பதில் : சுருக்கமாய்ச் சொன்னால் தர்மத்தை ஒழிக்க வேண்டும் என்கிறார்கள். சொல்கிறவர்களுக்குத் தர்மம் இடையூறு செய்கிறது போல. தர்மம் என்கின்ற இவர்களின் செயல்கள் அடங்க மறுக்கிறது. அதனால், ‘பிரேம்’ஐ உடைத்துவிட்டால் எல்லைகள் இன்றித் தாம் செயல்படலாம் என்று இவர்கள் நினைக்கிறார்கள். வரலாற்று அனுபவங்களை உணர மறுக்கும் இவர்தம்மை என்சொல்ல? முருகனை ஒழிக்க நினைத்த சூரன் தான் ஒழிந்து போனான். நரசிம்மரை ஒழிக்க நினைத்த இரணியன் தான் ஒழிந்து போனான். இராமனை ஒழிக்க நினைத்த இராவணன் தான் ஒழிந்து போனான். தர்மத்தை ஒழிக்க நினைக்கிறவர்கள் கதையெல்லாம் இப்படித்தான் முடியும்.
சல்லடையாரின் சலிப்பு: ‘தம்பிக்கு அனுபவம் போதாதுங்கோ! ஹீ..ஹீ.. ஹி…!’ என்று முடித்திருக்கிறார். இவரது இந்த பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.