மணிப்பூரில் இன்று அதிகாலை நேரத்தில் தடை செய்யப்பட்ட ஆயுதக் குழுக்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த 3 பேர் கொல்லப்பட்டனர்.
மணிப்பூரில் கூகி பழங்குடி இனத்தவருக்கும் மெயிட்டி சமூகத்தினருக்கும் இடையே கடந்த மே மாதம் 3-ம் தேதி மோதல் தொடங்கியது. இது வன்முறையாக வெடித்து 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். வன்முறையைக் கட்டுப்படுத்த மாநில அரசு, இராணுவம், அஸ்ஸாம் ரைஃபிள்ஸ் ஆகிய பிரிவுகளும் களமிறக்கப்பட்டன. எனினும், கடந்த 4 மாதங்களாக கலவரத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. கடந்த 8-ம் தேதி டெங்னோபால் மாவட்டத்தில் நடந்த கலவரத்தில் 3 பேர் கொல்லப்பட்டனர்.
இந்த நிலையில், கங்போப்கி மாவட்டத்திற்கு தடை செய்யப்பட்ட ஆயுதக் குழுவினர் இன்று அதிகாலை 3 மணியளவில், ஆயுதக் குழுவினர் ஒரு வாகனத்தில் வந்திருக்கிறார்கள். எல்லை கிராமங்களான இரங், கராம் ஆகிய பகுதிகளில் திடீரென துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டனர். இதில், கூகி ஸோ பழங்குடி இனத்தைச் சேர்ந்த 3 பேர் கொல்லப்பட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த இரு மலை கிராமங்களிலும் பழங்குடி இன மக்களே அதிகம் வசித்து வருகின்றனர்.
மணிப்பூரில் மீண்டும் தீவிரவாத குழுக்களின் நடமாட்டம் அதிகரித்திருக்கிறது என்றும், தீவிரவாதிகள் மக்களோடு மக்களாக கலந்திருக்கின்றனர் என்றும் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள். குறிப்பாக, தடை செய்யப்பட்ட ஐக்கிய தேசிய விடுதலை முன்னணி (UNLF) மற்றும் மக்கள் விடுதலை இராணுவம் (PLA) ஆகிய குழுக்களைச் சேர்ந்த தீவிரவாதிகள் தான் கடந்த வாரமும், தற்போதும் துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் என்று கூறப்படுகிறது.