திருநெல்வேலி பாளையங்கோட்டையில் கிறிஸ்தவர்கள் மத்தியில் இந்து மதம் பற்றி வெறுப்புணர்வைத் தூண்டும் வகையில் பேசிய தமிழக சபாநாயகர் அப்பாவு மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, காவல் நிலையத்தில் இந்து முன்னணி சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டது.
இது தொடர்பாக, நெல்லை மாநகர் மாவட்டச் செயலாளர் விமல் என்பவர், பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் இன்று புகார் கொடுத்துள்ளார். அதில், கடந்த பத்தாம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று பாளையங்கோட்டை சேவியர் கல்லூரி மைதானத்தில் பாளையங்கோட்டை மறை மாவட்ட பொன்விழா ஆண்டு நடைபெற்றது.
இந்த விழாவில் பேசிய தமிழக சபாநாயகர் அப்பாவு என்பவர் 96 சதவீத இந்துக்களுக்குக் கல்வியை மறுத்தது தான் சனாதனம் என்றும், சனாதனம் என்றால் 4 சதவீத மக்களுக்குக் கல்வி கற்க அனுமதி உண்டு மற்றவர்கள் அடிமையாக வாழ வேண்டும் என்றும், 4 சதவீதத்தைத் தவிர்த்துப் பார்த்தால் 94 சதவீத இந்துக்களுக்குக் கல்வி மறுக்கப்பட்டது எனத் தெரிவித்துள்ளார்.
கிறிஸ்துவ மக்கள் கூடியிருந்த சபையில் இந்து மதத்தை இழிவாகப் பேசி மத விழிப்புணர்வைத் தூண்டும் வகையிலும், பிற மதத்தினுடைய இந்து மதத்தை இழிவாகப் பேசியும், இரு தரப்பினுடைய கலவரம் உண்டு பண்ணும் வகையிலும், நாட்டில் சட்டம், ஒழுங்கு அமைதியைச் சீர் குலைக்கும் வகையிலும் பேசியுள்ளார்.
மேற்படி, அப்பாவு என்பவரின் இந்த பேச்சை முன்னிலைப்படுத்தி, இஸ்லாமியர்கள் சமூக வலைதளங்கில், இந்து மதம் குறித்து இழிவாகப் பேசி வருகின்றனர்.
மேலும், இந்துக்களின் மத உணர்வைப் புண்படுத்தும் வகையில் அப்பாவு பேசியது எனக்கு மிகுந்த மனவேதனையை ஏற்படுத்தி உள்ளது.
அப்பாவு, இந்து மதத்தைக் குறித்து கிறிஸ்தவர்கள் மத்தியில் பேசியது குறித்து இந்துக்கள் பலர் என்னிடம் வேதனை தெரிவித்தனர்.
மதவெறுப்புணர்வை தூண்டும் வகையில், பேசிய சபாநாயகர் அப்பாவு மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுத்து, அமைதியையும், நீதியையும் நிலைநாட்டுமாறு வேண்டுகிறேன் எனத் தெரிவித்துள்ளார்.
காவல் நிலையத்தில் புகார் கொடுக்க, விமலுடன், இந்து முன்னணி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உடன் சென்றனர்.
அப்போது, காவல் ஆய்வாளர் பணி நிமித்தமாக வெளியே சென்றுள்ளதால், புகார் மனு மீது, உடனே ரசீது கொடுக்க முடியாது, இன்று மாலை வந்து ஆய்வாளரிடம் பேசுங்க என காவல் நிலையத்தில் உள்ளவர்கள் தெரிவித்துள்ளனர்.