சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று கூறிய தி.மு.க. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது, உத்தரப் பிரதேச மாநிலத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கும் நிலையில், தற்போது மும்பையிலும் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
சென்னையில் சமீபத்தில் இடதுசாரி அமைப்பு நடத்திய சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய, தமிழக முதல்வர் ஸ்டாலின் மகனும், தி.மு.க. அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று கூறினார். இது நாட்டிலுள்ள ஒட்டுமொத்த இந்துக்கள் மற்றும் இந்து அமைப்பினர் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. உதயநிதிக்கு கருத்துக்கு உலகம் முழுவதிலுமுள்ள இந்துக்கள் கடும் கண்டனத்தை பதிவு செய்தனர்.
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியைச் சேர்ந்த சாமியார் ஒருவர், சனாதனத்தை இழிவாகப் பேசிய உதயநிதியின் தலைக்கு 10 கோடி ரூபாய் சன்மானம் அறிவித்திருந்தார். மேலும், அம்மாநிலத்தின் ராம்பூர் காவல் நிலையத்தில் இந்து வழக்கறிஞர்கள் அளித்த புகாரின் பேரில், உதயநிதி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இது தவிர, உதயநிதி மீது நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி, முக்கியப் பிரமுகர்கள் பலரும் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதினர்.
இந்த நிலையில், சனாதன சர்ச்சை விவகாரத்தில் அமைச்சர் உதயநிதிக்கு எதிராக மகாராஷ்டிரா மாநிலத்திலும் 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மும்பையிலுள்ள மிரா சாலை காவல் நிலையத்தில், இரு பிரிவினர் இடையே மோதலை உருவாக்குவது, மத நம்பிக்கையினை புண்படுத்துவது ஆகிய பிரிவுகளின் கீழ் உதயநிதி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.