அமெரிக்காவில் போலீஸ் வாகனம் மோதி இந்திய மாணவி உயிரிழந்த நிலையில், அச்சம்பவம் குறித்து காவல்துறை அதிகாரிகள் கேலி செய்து அலட்சியமாக சிரித்துப் பேசிய விவகாரம் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருக்கிறது.
ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஜான்வி கண்டூலா. 23 வயதாகும் இவர், அமெரிக்காவின் தலைநகர் வாஷிங்டன் மாகாணத்தில் உள்ள சியாட்டல் நகரில் முதுநிலை பட்டப்படிப்பு படித்து வந்தார். இவர், கடந்த ஜனவரி மாதம் 23-ம் தேதி சியாட்டலில் சாலையைக் கடந்தபோது, அதிவேகமாக வந்த காவல்துறை ரோந்து வாகனம் மோதியது. இதில், 100 மீட்டர் தூரம் தூக்கி வீசப்பட்ட ஜான்வி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
அப்போது, அந்தக் காரை ஓட்டி வந்த காவல்துறை அதிகாரி கெவின் டேவ், மணிக்கு 80 கி.மீ. வேகத்தில் வந்ததாக, உடன் வந்த காவல்துறை அதிகாரி டேனியல் ஆடரர் தெரிவித்திருந்தார். ஆனால், அந்தக் கார் மணிக்கு 120 கி.மீட்டருக்கும் அதிகமான வேகத்தில் வந்தது விசாரணையில் தெரியவந்தது. அதிகாரி டேனியல் ஆடரர், சியாட்டல் நகர காவல் அதிகாரிகள் சங்கத்தின் துணைத் தலைவராக பதவி வகித்து வருகிறார்.
இந்த சூழலில், விபத்து நடந்தவுடன் சங்கத்தின் தலைவரும், மூத்த காவல்துறை அதிகாரியுமான மைக் சோலன் என்பவரை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு பேசிய டேனியல் ஆடரர், “வழக்கமான பெண் தான். 11,000 டாலருக்கு காசோலை தயார் செய்து வையுங்கள். அவளுக்கு 26 வயதுதான் இருக்கும். எனவே, பெரிய மதிப்பு இல்லை” என்று கூறிவிட்டு சத்தமாக சிரிக்கிறார். டேனியல் ஆடரர் பேசிய பேச்சு முழுவதும், அவரது உடம்பில் பொருத்தப்பட்டிருந்த கேமராவில் பதிவாகி இருந்தது.
இதை சீயாட்டல் காவல்துறை தற்போது வெளியிட்டிருக்கிறது.இந்த காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி, பொதுமக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இதையடுத்து, தொலைபேசியில் உரையாடிய 2 காவல்துறை அதிகாரிகள் மீதும் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருக்கிறது.