முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் நடந்த ஆயுதக் கொள்முதல் ஊழல் முதல், அரசு மருத்துவமனையில் ஆக்ஸிஜன் சிலிண்டர் இன்றி குழந்தைகள் உயிரிழந்தது வரையிலான அனைத்து ஊழல் மற்றும் முறைகேடுகளை “ஜவான்” திரைப்படம் அம்பலப்படுத்தி இருப்பதாக, பா.ஜ.க. பாராட்டுத் தெரிவித்திருக்கிறது.
தமிழ்த் திரைப்பட இயக்குனர் அட்லீ இயக்கத்தில், நடிகர் ஷாருக்கான் நடிப்பில் கடந்த வாரம் வெளியான படம் ‛ஜவான்’. தந்தை, மகன் என 2 கதாபாத்திரங்களில் ஷாருக்கான் நடித்திருக்கும் இத்திரைப்படத்தில், வங்கிக் கடனை செலுத்த முடியாமல் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் நிலையில், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு கடன் தள்ளுபடி செய்தல், அரசு மருத்துவனைகளில் ஆக்ஸிஜன் சிலிண்டர் இன்றி 50-க்கும் மேற்பட்ட குழந்தைகள் ஒரே நேரத்தில் உயிரிழந்தது, ஆயுதக் கொள்முதல் ஊழல், மக்களுக்குத் தீங்கு விளைவிக்கும் தொழிற்சாலைகள் உள்ளிட்ட பெரிய நிறுவனங்களுக்குடன் அரசியல் தலைவர்கள் ஒப்பந்தம் செய்தல் உட்பட பல்வேறு பிரச்சனைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த நிலையில்தான், பா.ஜ.க. சார்பில் ‛ஜவான்’ திரைப்படத்துக்கு பாராட்டும், நன்றியும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதுகுறித்து பா.ஜ.க. செய்தி தொடர்பாளர் கவுரவ் பாட்டியா தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் பதிவில், “ஜவான் திரைப்படத்தின் மூலம் 2004 முதல் 2014 வரையிலான காங்கிரஸ் கட்சியின் ஆட்சியை நினைவுப்படுத்தியதற்கு நன்றி. காமன்வெல்த் ஊழல், 2ஜி ஊழல், நிலக்கரி சுரங்க ஊழல் என முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் ஊழல் மலிந்து கிடந்தது. அதேசமயம், பிரதமர் மோடி தலைமையிலான அரசு, ஊழலற்ற அரசாக, தூய்மையான ஆட்சி நிர்வாகத்தை வழங்கும் அரசாக 9 ஆண்டுகளை கடந்தும் செயல்பட்டு வருகிறது. வெளிப்படைத்தன்மை, நேர்மையான ஆட்சியை வழங்க பிரதமர் மோடி தலைமையிலான அரசு உறுதி பூண்டிருக்கிறது.
காங்கிரஸ் காலத்தில் 1.6 லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள். அதேநேரம், பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசில் குறைந்தபட்ச ஆதரவு விலையை அமல்படுத்தப்பட்டிருக்கிறது. அதோடு, பிரதமர் கிசான் சம்மன் நிதித் திட்டத்தின் மூலம் 11 கோடி விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக 2.55 லட்சம் கோடி ரூபாய் வரவு வைக்கப்பட்டிருக்கிறது. காங்கிரஸ் ஆட்சியில் கடனை திருப்பிச் செலுத்தாத நண்பர்களுக்கு மீண்டும் கடன் வழங்கப்பட்டது. தப்பியோடிய விஜய் மல்லையா, முந்தையக் கடனைக் கூட திருப்பி செலுத்தாமல், மேலும் கடனை நீட்டித்ததற்காக அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்குக்கு நன்றி தெரிவித்தார்.
மேலும், ராணுவத்தின் நலனில் மோடி அரசு மிகுந்த அக்கறையுடன் இருக்கிறது. நமது ராணுவ வீரர்களுக்கு 2.3 லட்சம் குண்டு துளைக்காத உடைகளை மோடி அரசு வழங்கி இருக்கிறது. மேலும், ஒரே பதவி ஒரே ஓய்வூதியம் திட்டத்துக்காக 1.2 லட்சம் கோடி ரூபாயை மோடி அரசு வழங்கி இருக்கிறது. அதேபோல, ராணுவத்தை வலுப்படுத்துவதற்காக ரஃபேல், அபாச்சி, ச்சினூக் ஆகியவை வாங்கப்பட்டிருக்கின்றன. ஆனால், கடந்த கால ஆட்சியில் குண்டு துளைக்காத ஆடைகளை வாங்குவதற்கு பதிலாக வி.வி.ஐ.பி.க்களுக்கான ஹெலிகாப்டர்களை வாங்குவதற்குத்தான் முன்னுரிமை அளிக்கப்பட்டது.
புல்வாமா தாக்குதலுக்கு மோடி அரசு உடனுக்குடன் பதிலடி கொடுத்தது. பாகிஸ்தானில் உள்ள பால்கோட் மீது துல்லியத் தாக்குதல் நடத்தப்பட்டது. அதேசமயம், காங்கிரஸ் ஆட்சியில் மும்பைத் தாக்குதல் நடந்தபோது, அதற்கு பதிலடி கொடுக்க துல்லியத் தாக்குதல் நடத்த ராணுவம் அனுமதி கோரியபோது, அப்போதைய அரசு அனுமதி மறுத்து விட்டது” என்று கூறியிருக்கிறார்.