சட்ட விரோதப் பணப் பரிமாற்ற வழக்கில், ஜாமீன் கேட்டு செந்தில் பாலாஜி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான தீர்ப்பு, 20-ம் தேதி வழங்கப்படும் என்று கூறி, நீதிபதி அல்லி ஒத்திவைத்தார்.
தி.மு.க.வில் இலாகா இல்லாத அமைச்சராக இருக்கும் செந்தில் பாலாஜி, அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு, சென்னை புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். இவர், ஜாமீன் கோரி சென்னை அமர்வு நீதிமன்றம், சிறப்பு நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் என அலைந்து திரிந்த நிலையில், ஒரு வழியாக சென்னை அமர்வு நீதிமன்றம் விசாரிக்க அறிவுறுத்தப்பட்டது. இந்த சூழலில், செந்தில் பாலாஜி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனு, இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் தனது வாதத்தை முன்வைத்தார். தொடர்ந்து, அமலாக்கத்துறைத் தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது. இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி, வழக்கின் தீர்ப்பு செப்டம்பர் 20-ம் தேதி வழங்கப்படும் என்று கூறி, ஜாமீன் மனு மீதான விசாரணையை ஒத்தி வைத்தார்.
இதனிடையே, செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் இன்றுடன் நிறைவடைந்த நிலையில், சென்னை புழல் சிறையில் இருந்தபடியே, காணொளி வாயிலாக முதன்மை அமர்வு நீதிபதி அல்லி முன்பு ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை மேலும் 14 நாட்கள் நீட்டித்து, செப்டம்பர் 29-ம் தேதி வரை சிறையில் அடைக்கும்படி நீதிபதி அல்லி உத்தரவிட்டார்.