ஒரே நேரத்தில் பண்டிகை கொண்டாடும்போது, ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த முடியாதா என்று “ஒரே நாடு ஒரே தேர்தல்” குறித்து மத்தியப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பா.ஜ.க. மூத்த தலைவர் கேள்வி எழுப்பி இருக்கிறார்.
1967-ம் ஆண்டுக்கு முன்னதாக இந்தியாவில் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றம் உள்ளிட்டவற்றுக்கு ஒரே நேரத்தில்தான் தேர்தல் நடந்தது. ஆனால், அப்போதைய காங்கிரஸ் அரசு சில மாநிலங்களில் ஆட்சியைக் கலைத்ததால், சட்டமன்றங்களுக்கு தனியாக தேர்தல் நடத்த வேண்டிய சுழல் ஏற்பட்டது. எனினும், இன்னும் பல்வேறு மாநிலங்களுக்கு நாடாளுமன்றத் தேர்தலுடன்தான் சட்டமன்றத் தேர்தலும் நடத்தப்படுகிறது. ஆகவே, நாடாளுமன்றம், சட்டமன்றம் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வேண்டும் என்கிற கோரிக்கையை பா.ஜ.க. முன்வைத்து வருகிறது.
அதே சமயம், இந்த ”ஒரே நாடு ஒரே தேர்தல்” முழக்கத்திற்கு எதிர்கட்சிகள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன. எனினும், ஒரே நாடு ஒரே தேர்தலுக்கான சாத்தியக் கூறுகள் குறித்து ஆராய முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் ஒரு குழுவை மத்திய அரசு அமைத்தது. இக்குழுவின் முதல் கூட்டம் செப்டம்பர் மாதம் 23-ம் தேதி நடைபெறும் என்று அதன் தலைவர் ராம்நாத் கோவிந்த் அறிவித்திருக்கிறார். இக்கூட்டத்தில் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது குறித்து விவாதம் நடத்தப்படும் என்றும் ராம்நாத் கோவிந்த் தெரிவித்திருக்கிறார்.
இந்த நிலையில்தான், நாடு முழுவதும் ஒரே நாளில் பண்டிகைகைள் கொண்டாடும்போது, ஏன் தேர்தலை நடத்த முடியாது என்று பா.ஜ.க. மூத்த தலைவர் ஒருவர் கேள்வி எழுப்பி இருக்கிறார். இதுகுறித்து மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பா.ஜ.க. பொதுச் செயலாளர் கைலாஷ் விஜய்வர்கியா கூறுகையில், “நாம் நாடு முழுவதும் தீபாவளி பண்டிகையை கொண்டாடுகிறோம். அதேபோல கிறிஸ்துமஸ், ரம்ஜான் போன்ற பண்டிகைகளும் நாடு முழுவதும் ஒன்றாகக் கொண்டாடப்படுகிறது. அப்படி இருக்க, நாம் ஏன் தேர்தல் நாளை ஒன்றாகக் கொண்டாட முடியாது. மேலும், பெண்களுக்கான அதிகாரம் குறித்து பேசிக்கொண்டு மட்டுமே இருந்த நிலையில், பிரதமர் மோடி அரசு மசோதாவை தாக்கல் செய்து சரியான பதிலடி கொடுத்திருக்கிறது” என்றார்.