மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் உட்பட 5 மாநிலங்களில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலுக்கான ஏற்பாடுகள் குறித்து பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா, அக்கட்சியின் தேசிய பொதுச் செயலர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலங்கானா, மிசோராம் ஆகிய 5 மாநிலங்களுக்கு இந்தாண்டு இறுதியில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. மேற்கண்ட 5 மாநிலங்களிலும் ஆட்சியைக் கைப்பற்றுவதற்கு பா.ஜ.க. தீவிர முயற்சி செய்து வருகிறது. இதற்காக முன்கூட்டியே பிரசாரத்தைத் தொடங்கி இருக்கும் பா.ஜ.க., பல்வேறு யாத்திரைகளையும் நடத்தி வருகிறது. மேலும், நிர்வாகிகளின் கூட்டத்தைக் கூட்டி, தேர்தல் வியூகம் தொடர்பாக ஆலோசனையும் நடத்தி வருகிறது.
அந்த வகையில், பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா, மேற்கண்ட 5 மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தல் தொடர்பாக கட்சியின் தேசிய பொதுச் செயலாளர்களின் கூட்டத்தை டெல்லியில் கூட்டினார். இக்கூட்டத்தில் தொகுதி பஞ்சாயத்துத் தேர்தல்கள், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள், கட்சியின் அழைப்பு மையங்கள் மற்றும் பல்வேறு அரசியல் விஷயங்கள் உட்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன.
மேலும், வரவிருக்கும் 5 மாநில சட்டமன்றத் தேர்தலுக்கான உத்திகள் குறித்து, அனைத்து தேசிய பொதுச் செயலாளர்கள் கருத்துகளையும் ஜெ.பி.நட்டா கேட்டறிந்தார். இதுதவிர, தேர்தலுக்கான ஒருங்கிணைப்பாளர்களை நியமிப்பது தொடர்பாகவும் கலந்துரையாடல்கள் மற்றும் தகவல்கள் பரிமாறப்பட்டன. அதோடு, 5 மாநிலங்களில் நடைபெறும் கூட்டங்களில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றுவது குறித்தும் ஜெ.பி.நட்டா விவாதித்தார்.
அதேபோல, தேர்தலுக்காகத் தயாரிக்கப்பட்ட விளக்கக் காட்சிகளும் கூட்டத்தில் காட்சிப்படுத்தப்பட்டன, மேலும், மக்களவை மற்றும் சட்டமன்றத் தேர்தல்களுக்காக நாடு முழுவதும் அமைக்கப்பட்டுள்ள அழைப்பு மையங்கள் குறித்து விரிவான விவாதங்கள் நடந்தன. எல்லாவற்றுக்கும் மேலாக, கட்சி பலவீனமாக இருக்கும் இடங்களிலும், முக்கியத் தொகுதிகளிலும் மாநில தேர்தல் ஒருங்கிணைப்பாளர்கள் கவனம் செலுத்துவது தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டது.
கூட்டத்தில், மேற்கண்ட மாநிலங்களில் உள்ள 170-க்கும் மேற்பட்ட மக்களவைத் தொகுதிகள் குறித்தும் கட்சித் தலைவர்கள் ஆலோசனை நடத்தினர். அதோடு, ஏற்கெனவே நடந்து முடிந்த மாநிலங்களில் நடைபெற்ற இடைத்தேர்தல் குறித்தும் விவாதிக்கப்பட்டது. மேலும், பா.ஜ.க.வால் அமைக்கப்படும் அழைப்பு மையங்கள் குறித்து மத்திய இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் விளக்கம் அளித்தார். அதேபோல, இதுவரை நிறைவேற்றப்பட்ட பணிகள் மற்றும் நிலுவையில் உள்ள பணிகள் குறித்தும், முன்னோக்கிச் செல்லும் வழி குறித்தும் கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டது.