திருச்சி மாவட்டம் முசிறி அருகே உள்ள அருள்மிகு சந்திர மௌலீஸ்வர் திருக்கோவிலில் நான்கு செப்புப் பட்டயங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
திருச்சி மாவட்டம் முசிறியில் மிகவும் பழமை வாய்ந்த அருள்மிகு சந்திர மௌலீஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த திருக்கோவிலில் அண்மையில் நான்கு செப்புப் பட்டயங்கள் கண்டெடுக்கப்பட்டு உள்ளதாக, சுவடி பாதுகாப்புக்குழு தலைவர் தாமரைக் கண்ணன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாகப் பேசிய அவர், இந்த 4 செப்பு பட்டயங்கள் மிகவும் பழமை வாய்ந்தது. இந்த செப்புப் பட்டயங்கள் மூலம் அருள்மிகு சந்திர மௌலீஸ்வரர் திருக்கோவில் தொன்மையை அறிய முடிகிறது.
இந்தச் செப்பு பட்டங்கள் அனைத்தும் விஜயநகர மன்னர்கள் காலத்தைச் சேர்ந்தவை என்று தெரிய வருகிறது. இந்தப் பட்டயத்தில் திருக்கோவிலுக்கு நிலம், தானம் அளித்துள்ள தகவல்கள் உள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், விஜயநகர மன்னர்களின் பாரம்பரியம் மற்றும் வெற்றியின் சிறப்புகள் உள்ளிட்டவை குறித்தும் விளக்கப் பெற்றுள்ளது. இந்த திருக்கோவிலுக்கு மதுரை நாயக்க மன்னர்கள் அர்த்த ஜாம பூஜை செய்துள்ளனர். அதற்கு சேவைக் கட்டணமாக மூன்று காணி நிலம் வழங்கியுள்ளனர் என்ற தகவலும் இடம் பெற்றுள்ளது.
இதன் மூலம் இந்த திருக்கோவிலில் அன்று முதல் இன்று வரை சிறப்புப் பூஜைகள் நடைபெற்றுள்ளதும், பூஜைக்கான செலவுகளை ஏற்பதன் மூலம் புண்ணியம் கிடைக்கும் என்றும் நம்பிக்கை இருந்துள்ளதை அறிய முடிகிறது என்றார்.