நாட்டின் முக்கிய பலமே பிரதமர் மோடிதான். பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் இந்தியா உலகளாவிய அளவில் உயர்ந்திருக்கிறது. மேலும், உலகத் தலைவர்களால் பாராட்டப்படும் நபராக பிரதமர் மோடி வலம் வருகிறார் என்று பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா கூறியிருக்கிறார்.
தெலங்கானா மாநில பா.ஜ.க. நிர்வாகிகள் கூட்டம் இன்று நடந்தது. இக்கூட்டத்தில் பேசிய பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா, “நாம் தேர்தல் பிரச்சாரத்துக்குச் செல்லும்போது, தேசியப் பிரச்சனைகளை எழுப்புவதிலும், அவற்றைத் தீர்ப்பதிலும் நமது கட்சி வலுவாகவும், மற்றவர்களை விடவும் முன்னணியில் உள்ளது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். எதிர்கட்சிகள் தேசிய, மாநில மற்றும் உள்ளூர் பிரச்சனைகளை முன்வைத்து வருகின்றன. ஆகவே, நம்மைப் பற்றியும், நமது அரசுகள் பற்றியும் பரப்பப்படும் அவதூறுகளை முறியடிக்கத் தெளிவான பதிலைத் தரத் தயாராக இருக்க வேண்டும்.
தெலங்கானாவில் உள்ள எந்தக் கிராமத்துக்கும் நமது நிர்வாகிகள் சென்று வளர்ச்சித் தேவைகளுக்கு பதில் சொல்லலாம் என்பதை தயக்கமின்றி என்னால் கூற முடியும். காரணம், தேசமும், தேர்தலைச் சந்திக்கும் மாநிலங்களும் பா.ஜ.க.வுக்குச் சாதகமாக உள்ளன. பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு, சமூகத்தின் ஒவ்வொரு பிரிவினருக்கும் உழைத்துள்ளது என்பதை நாம் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். நமது வெற்றி தெலங்கானாவிலும் தெளிவாகத் தெரிகிறது.
பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் இந்தியாவின் உலகளாவிய மதிப்பு கணிசமாக உயர்ந்துள்ளது. இது உலகத் தலைவர்களால் அங்கீகரிக்கப்பட்டு பாராட்டப்படுகிறது. மேலும், நாட்டின் பலமே நமது பிரதமர் நரேந்திர மோடிதான். பல்வேறு துறைகளில் உள்ள மக்களின் நலன் மற்றும் நல்வாழ்வுக்கான பிரதமரின் தொடர்ச்சியான மற்றும் இடைவிடாத முயற்சிகள் நமது நாட்டிற்கு மேலும் மேலும் வலு சேர்க்கின்றன.
பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தின் கீழ், நாட்டின் மக்கள்தொகையில் தோராயமாக 70 சதவீதத்தை கொண்டுள்ள 80 கோடி மக்களுக்கு இலவச ரேஷன் வழங்கப்பட்டிருக்கிறது. இந்த முயற்சி இன்னும் தொடர்கிறது. இந்த 80 கோடி பயனாளிகளில் கிட்டத்தட்ட 2 கோடி பேர் தெலங்கானாவைச் சேர்ந்தவர்கள். பிரதமர் மோடியின் தலைமையில், கடந்த 5 ஆண்டுகளில், 13.5 கோடி பேர் வறுமையில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர் என்பதை நீங்கள் மக்களுக்குத் தெரிவிக்க வேண்டும்” என்று கூறியிருக்கிறார்.