கர்நாடக மாநில எல்லைப் பகுதியான அத்திப்பள்ளியில் உள்ள ஒரு பட்டாசுக் கடையில் திடீரென ஏற்பட்ட பட்டாசுக் கடை வெடிவிபத்தில், 14 பேர் பலியாகினர். பலர் காயம் அடைந்தனர்.
கர்நாடக மாநிலம் அத்திப்பள்ளியில் சோதனைச் சாவடி உள்ளது. இங்கு, நவீன்குமார் என்பவருக்கு சொந்தமான பட்டாசுக்கடை உள்ளது. அதில், தீபாவளி பண்டிகையையொட்டி,
பட்டாசு விற்பனை செய்ய கடை அமைத்து வந்தனர். இதில், வாணியம்பாடி, அரூர் டி. அம்மாபேட்டை, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட தமிழகத்தைச் சேர்ந்த 30 பேர் பணியில் ஈடுபட்டு வந்தனர்.
நேற்று கடைக்கு ஒரு கன்டெய்னர் லாரி மற்றும் இரு சரக்கு வாகனங்களில் பட்டாசுகள் கொண்டு வரப்பட்டன. அதனைத் தொழிலாளர்கள் இறக்கிக் கொண்டிருந்தபோது யாரும் எதிர்பாராத விதமாக லாரியில் இருந்த பட்டாசுகள் வெடித்துச் சிதறின.
இதில், தீப்பொறி கடைக்குள் விழுந்ததால், அங்கிருந்த பட்டாசுகள் வெடித்துத் தீப்பிடித்து எரிந்தன. காற்றில் தீ மளமளவென சரக்கு வாகனங்களிலிருந்த பட்டாசுகளுக்கும் பரவியது. இதனால், அந்த பகுதியே புகை மண்டலமாக காட்சியளித்தது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் 2 மணி நேரத்துக்கும் மேலாகப் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இந்த விபத்தில், 13 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். இதில், 2 பேர் உடல் மட்டும் அடையாளம் காணப்பட்டது. தருமபுரி மாவட்டம் டி.அம்மாபேட்டையைச் சேர்ந்த சச்சின் மற்றும் வேடியப்பன் ஆகியோர் உடல்கள் மட்டும் அடையாளம் காணப்பட்டன. மற்றவர்களை அடையாளம் காணும் பணி நடந்து வருகிறது.
இந்த விபத்தில், கடை உரிமையாளர் நவீன உள்ளிட்ட பலர் பலத்த காயமடைந்தனர். அவர்களை மீட்டு அப்பகுதியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பிவைத்தனர். அங்கு அவர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விபத்தில் ஒரு ஒரு கன்டெய்னர் லாரி, 3 சரக்கு வாகனங்கள், 7 இருசக்கர வாகனங்கள் என மொத்தம் 11 வாகனங்கள் எரிந்து சேதமடைந்தன. இதன் மொத்த மதிப்பு சுமார் 5 கோடி ரூபாய் இருக்கும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் தமிழகத்தைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது. விபத்திற்கான காரணம் குறித்து உரிய விசாரணை நடத்தப்படும். கடை நடத்த உரிய அனுமதி பெறப்பட்டுள்ளதா? அல்லது விதி மீறி பட்டாசு விற்பனை செய்யப்பட்டதா? என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.