மத்தியப் பிரதேச சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் 4-வது வேட்பாளர் பட்டியலை பா.ஜ.க. இன்று வெளியிட்டிருக்கிறது. இப்பட்டியலின்படி, மாநில முதல்வர் சிவராஜ் சிங் சௌகான், தனது பாரம்பரியத் தொகுதியான புத்னியில் மீண்டும் போட்டியிடுகிறார்.
மத்தியப் பிரதேச மாநில சட்டமன்றத்தின் பதவி காலம் இந்த ஆண்டோடு நிறைவடைகிறது. இம்மாநிலத்தில் ஆளும் பா.ஜ.க.வுக்கும், எதிர்கட்சியான காங்கிரஸுக்கும் இடையே நேரடிப் போட்டி நிலவுகிறது. கடந்த சில மாதங்களாவே இரு கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இம்மாநிலத்தில் சுமார் 60,000 கோடிக்கும் அதிகமான திட்டங்களுக்கு பிரதமர் மோடி சமீபத்தில் அடிக்கல் நாட்டியது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், இம்மாநிலத்தில் நவம்பர் 17-ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறும் என்று இந்த தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜிவ் குமார் இன்று காலை அறிவித்திருந்தார். இதையடுத்து, மத்தியப் பிரதேச மாநிலத்தில் போட்டியிடும் 57 வேட்பாளர்கள் அடங்கிய 4-வது பட்டியலை பா.ஜ.க. வெளியிட்டிருக்கிறது. இம்மாநிலத்தில் மொத்தமுள்ள 230 தொகுதிகளில் 79 பேர் அடங்கிய வேட்பாளர்கள் பட்டியலை 3 கட்டமாக பா.ஜ.க. வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.
இம்மாநிலத்தில், மத்திய விவசாயத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், உணவு பதப்படுத்தும் தொழில்துறை இணை அமைச்சர் பிரஹலாத் சிங் படேல், ஊரக வளர்ச்சி மற்றும் எஃகு துறை இணை அமைச்சர் ஃபக்கன் சிங் குலாட்சே மற்றும் 4 மக்களவை உறுப்பினர்கள் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.