நீண்ட காலம் சிறையில் உள்ள இஸ்லாமியர்களை விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கை தவறானது. அவர்கள் இஸ்லாமியர் என்பதால் வெளியேவிட வேண்டாம் என்று சொல்லவில்லை, அவர்கள் தீவிரவாதிகள் என்பதால்தான் வெளியேவிட வேண்டாம் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து பாஜக தமிழ்நாடு மையக்குழு கூட்டம் சென்னை தி.நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் நடைபெற்றது.
பாஜக தேசிய அமைப்புச் செயலாளர் பி.எல்.சந்தோஷ், மாநில தலைவர் அண்ணாமலை, மத்திய இணையமைச்சர் எல்.முருகன், தமிழக பாஜக மூத்த தலைவர்கள் உள்ளிட்டோர் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் கால அவகாசம் உள்ளது. பாஜக ஒரு தேசிய கட்சி என்பதால், தற்போது 5 மாநிலத் தேர்தலில் கவனம் செலுத்தி வருகிறது.
தமிழகத்தைப் பொறுத்தவரை 9 எம்.பி தொகுதிகளில் பாஜக தனிக்கவனம் செலுத்தி வருகிறது. ஆனால், மொத்தம் உள்ள 39 தொகுதிகளிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறோம்.
ஆ.ராசா, ஜெகத்ரட்சகன் ஆகியோருக்கு சொந்தமான சொத்துக்கள் முடக்கம், பொது மக்கள் பணம் எந்த அளவுக்குத் தனியார் பணமாக மாறியுள்ளது என்பதைக் காட்டுகிறது.
நீண்ட காலம் சிறையில் உள்ள இஸ்லாமியர்களை விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கை தவறானது. அது உயிரிழந்தவர்களைக் கொச்சைப்படுத்துவதாகும். இன்னும் சொல்லப்போனால், அவர்கள் இஸ்லாமியர் என்பதால் வெளியே விட வேண்டாம் என்று சொல்லவில்லை, அவர்கள் தீவிரவாதிகள் என்பதால்தான் வெளியே விட வேண்டாம் என்கிறோம் என்றார்.