காஸா மீது இஸ்ரேலியப் படைகள் தாக்குதலை நிறுத்தினால், பிணைக் கைதிகளை விடுவிக்கத் தயாராக இருப்பதாக ஹமாஸ் தீவிரவாதிகள் நிபந்தனை விதித்திருக்கின்றனர்.
பாலஸ்தீனத்தைச் சேர்ந்த தன்னாட்சி பெற்ற நகரம் காஸா. இந்த நகரை ஹமாஸ் தீவிரவாதிகள் தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கின்றனர். இவர்கள் அவ்வப்போது இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்துவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். அந்த வகையில், கடந்த 7-ம் தேதி காலை திடீரென ஏவுகணைத் தாக்குதலை நடத்தினர். இதனால் இஸ்ரேல் திக்குமுக்காடிப்போனது.
எனினும், சுதாரித்துக் கொண்ட இஸ்ரேல் பதிலடித் தாக்குதல் நடத்தி வருகிறது. விமானப்படை மூலம் கொத்துக் கொத்தாக குண்டு மழை பொழிந்ததோடு, பீரங்கி மற்றும் டாங்கிகளின் மூலம் குண்டுகளை வீசியது. மேலும், இஸ்ரேல் நாட்டின் காலாட் படைகளும் காஸா நகருக்குள் ஊடுருவி ஹமாஸ் தீவிரவாதிகளை தேடித் தேடி வேட்டையாடி வருகிறது.
இப்போர் 12-வது நாளாக இன்றும் நீடித்து வரும் நிலையில், ஹமாஸ் தீவிரவாதிகளின் தாக்குதலில் இஸ்ரேல் தரப்பில் 1,400-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். அதேசமயம், இஸ்ரேல் நடத்திய பதிலடித் தாக்குதலில் 500-க்கும் மேற்பட்ட ஹமாஸ் தீவிரவாதிகள் உட்பட 3,000 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்.
அதேபோல, இஸ்ரேல் தரப்பில் 6,500-க்கும் மேற்பட்டோரும், காஸா நகரைச் சேர்ந்த 10,000-க்கும் மேற்பட்டோரும் காயமடைந்திருக்கிறார்கள். குறிப்பாக, இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில், முக்கியத் தலைவர்கள் சிலர் கொல்லப்பட்டதோடு, ஹமாஸ் தீவிரவாதிகளின் தலைமையகம், தீவரவாத முகாம்கள் உள்ளிட்டவையும் அழிக்கப்பட்டன. இதனால், ஹமாஸ் தீவிரவாதிகள் செய்வதறியாது திகைத்து வருகின்றனர்.
இதனிடையே, இஸ்ரேலுக்குள் ஊடுருவிய ஹமாஸ் தீவிரவாதிகள் இஸ்ரேலியர்கள் மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களை பிணைக் கைதிகளாகப் பிடித்துச் சென்றனர். இந்த பிணைக் கைதிகளை விடுவிக்க வேண்டும் என்று இஸ்ரேல் அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. அதேபோல, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளும் பிணைக் கைதிகளை விடுவிக்கும்படி வலியுறுத்தி இருக்கின்றனர்.
இந்த நிலையில், பிணைக் கைதிகளை விடுவிக்க முன்வந்திருக்கும் ஹமாஸ் தீவிரவாதிகள், முக்கிய நிபந்தனை ஒன்றையும் விதித்திருக்கின்றனர். அதன்படி, காஸா பகுதியில் தாக்குதல் நடத்துவதை இஸ்ரேலிய படைகள் நிறுத்தினால், அடுத்த ஒரு மணி நேரத்தில் பிணைக் கைதிகளை விடுவிக்கத் தயாராக இருப்பதாக தெரிவித்திருக்கிறார்கள்.