தீயசக்திகள் தலைதூக்கும்போதெல்லாம், சனாதன தர்மம் அதனை சவாலாக ஏற்றுக்கொண்டு, நாட்டுக்காகவும், நாட்டு மக்களின் நலனுக்காகவும் பாடுபடுகிறது என்று உத்தரப் பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியிருக்கிறார்.
நவராத்திரி விழாவை முன்னிட்டு, 9-வது நாளான ‘மகா நவமி’யில், உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூரில் உள்ள கோரக்நாத் கோவிலின் சக்தி பீடத்தில் உள்ள அம்மன் சித்திதாத்ரிக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் பூஜை செய்து வழிபாடு நடத்தினார். தொடர்ந்து, துர்கா தேவியின் 9 அவதாரங்களைக் குறிக்கும் வகையில், 9 கன்னிப் பெண்களின் கால்களைக் கழுவி கன்யா பூஜை செய்தார்.
மேலும், வேத மந்திரங்கள் முழங்க, சிறுமிகளுக்கு ஆரத்தி எடுத்து ஆசிரவாதம் பெற்று, அச்சிறுமிகளின் நெற்றியில் ‘ரோலி திலகம்’ தடவினார். இந்த 9 சிறுமிகள் தவிர, திரளாக வந்திருந்த சிறுமிகளுக்கும் முதல்வர் யோகி ஆதித்யநாத், ஆரத்தி எடுத்து வழிபாடு செய்தார். மேலும், சிறுமிகளின் ஆசிர்வாதத்தைப் பெறும்போது, அவர்களுக்கு தட்சணை மற்றும் பரிசுகளையும் முதல்வர் யோதி ஆதித்யநாத் வழங்கினார்.
பூஜைக்குப் பிறகு, கோரக்நாத் கோவில் சமையலறையில் சமைத்த உணவை யோகி ஆதித்யநாத் தனது கைகளால் சிறுமிகளுக்கு வழங்கினார். தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் யோகி ஆதித்யநாத், “நாளை விஜயதசமி பண்டிகை. இது, தர்மம், உண்மை மற்றும் நீதியின் வெற்றித் திருவிழா.
ஒவ்வொரு காலக்கட்டத்திலும், ஒவ்வொரு சூழ்நிலையிலும், தீய சக்திகள் தலைதூக்கும் போதெல்லாம், சனாதன தர்மம் அதனை சவாலாக ஏற்றுக்கொண்டு, நாட்டு நலனுக்காகவும், நாட்டு மக்களின் நலனுக்காகவும் பாடுபடுகிறது. மேலும், மனிதகுலத்திற்கு நல்ல வழியைக் காட்டுகிறது” என்றார்.
கன்யா பூஜையின்போது, கோரக்நாத் கோவில் தலைமை அர்ச்சகர் யோகி கமல்நாத், காசியில் இருந்து வந்த மகாமண்டலேஷ்வர் சந்தோஷ் தாஸ் சதுவா பாபா, கலிபாரி மஹந்த் ரவீந்திரதாஸ், கோரக்நாத் கோவில் அர்ச்சகர் ஆச்சார்யா ராமானுஜ் திரிபாதி வேதிகா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.