இமாச்சலப் பிரதேசத்திற்குச் சென்றிருக்கும் பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா, பிலாஸ்பூரிலுள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்குச் சென்று ஆசிரியர்களுடன் உரையாடினார்.
பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா, தனது சொந்த மாநிலமான இமாச்சலப் பிரதேசத்திற்குச் சென்றிருக்கிறார். கடந்த 22-ம் தேதி தர்மலாசாலாவில் நடந்த இந்தியா-நியூஸிலாந்து இடையேயான உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியை கண்டு களித்தார். தொடர்ந்து, புகழ்பெற்ற இந்திய சுழற்பந்து வீச்சாளர் பிஷன் சிங் பேடியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தார்.
இதுகுறித்து நட்டா வெளியிட்டிருந்த எக்ஸ் பதிவில், “இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனும், சுழற்பந்து வீச்சாளருமான பிஷன் சிங் பேடியின், புகழ்பெற்ற வாழ்க்கை இந்திய கிரிக்கெட்டின் முன்னேற்றத்திற்காக அர்ப்பணிக்கப்பட்டது. ஆகவே, தனது விளையாட்டுத் திறன் மற்றும் தலைமைத்துவத்தின் பண்பு ஆகியவற்றால் ஒரு விளையாட்டு வீரராக மட்டுமல்லாது சிறந்த தலைவராகவும் நினைவுகூரப்படுவார்” என்று தெரிவித்திருந்தார்.
இதைத் தொடர்ந்து, பிலாஸ்பூரிலுள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்துக்குச் (எய்ம்ஸ்) சென்று, அந்நிறுவனத்தில் பணிபுரியும் ஆசிரியர்களுடன் கலந்துரையாடினார். இதுகுறித்து நட்டா அலுவலகம் வெளியிட்டிருக்கும் எக்ஸ் பதிவில், “பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா இமாச்சலப் பிரதேச மாநிலம் பிலாஸ்பூரிலுள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்குச் சென்று ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுடன் கலந்துரையாடினார்” என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.