உலகில் விவசாயம் முறையாக அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு சில நாடுகளில் இந்தியாவும் ஒன்று. ஆகவே, உலகளாவிய விதைச் சந்தையில் இந்தியாவை ஒரு பெரிய பங்காளியாக மாற்றுவதே நமது இலக்காக இருக்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியிருக்கிறார்.
பாரதிய பீஜ் சஹ்காரி சமிதி லிமிடெட் (பி.பி.எஸ்.எஸ்.எல்.) சார்பில், கூட்டுறவுத் துறை மூலம் மேம்படுத்தப்பட்ட மற்றும் பாரம்பரிய விதைகளை உற்பத்தி செய்வதற்கான தேசிய கருத்தரங்கம் டெல்லியில் இன்று நடைபெற்றது. இக்கருத்தரங்கில், மத்திய உள்துறை அமைச்சரும், கூட்டுறவு அமைச்சருமான அமித்ஷா கலந்துகொண்டு, பி.பி.எஸ்.எஸ்.எல்.-ன் லோகோ, இணையதளம் மற்றும் சிற்றேடு ஆகியவற்றை வெளியிட்டார். மேலும், பி.பி.எஸ்.எஸ்.எல். உறுப்பினர்களுக்கு உறுப்பினர் சான்றிதழ்களையும் வழங்கினார்.
தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, “விவசாயிகள் நலன் மற்றும் உணவு உற்பத்தித் துறையில் புதிய தொடக்கங்களின் பார்வையில் இன்றைய தினம் மிகவும் முக்கியமானது. அறிவியல் பூர்வமாக தயாரிக்கப்பட்டு சான்றளிக்கப்பட்ட விதைகள் நாட்டில் உள்ள ஒவ்வொரு விவசாயிக்கும் கிடைப்பதில்லை.
ஆகவே, இவ்விதைகள் ஒவ்வொரு விவசாயியையும் சென்றடைவதை உறுதி செய்வதற்காக, பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு, இந்த கூட்டுறவு சங்கத்தை நிறுவி இருக்கிறது. வரும் நாட்களில் இந்தியாவில் விதை பாதுகாப்பு, ஊக்குவிப்பு மற்றும் ஆராய்ச்சி துறையில் பி.பி.எஸ்.எஸ்.எல். பெரும் பங்களிப்பை வழங்கும்.
பாரம்பரிய இந்திய விதைகள் பாதுகாக்கப்பட்டு, வரும் தலைமுறையினருக்குக் கொண்டு செல்லப்பட வேண்டும். இதனால் ஆரோக்கியமான தானியங்கள், பழங்கள் மற்றும் காய்கறிகளின் உற்பத்தி தொடரும். இந்தப் பணியையும் பி.பி.எஸ்.எஸ்.எல். செய்யும். அதேபோல பி.பி.எஸ்.எஸ்.எல்.-ன் லாபம் விதை உற்பத்தி செய்யும் விவசாயிகளின் வங்கிக் கணக்குகளுக்கு நேரடியாகச் செல்லும்.
பாரதிய பீஜ் சககாரி சமிதி லிமிடெட் நாட்டின் கிராமப்புற பொருளாதாரத்திற்கு உத்வேகம் அளிப்பதுடன், விதை உற்பத்தியில் நாட்டை தன்னிறைவு அடையச் செய்வதற்கும், உலக விதைச் சந்தையில் பயனாளிகளின் பங்கு அதிகரிப்பதற்கும் உதவும். மேலும், உலகளாவிய விதைச் சந்தையில் இந்தியாவை ஒரு பெரிய பங்காளியாக மாற்றுவதே நமது இலக்காக இருக்க வேண்டும்.
உலகில் விவசாயம் முறையாக அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு சில நாடுகளில் இந்தியாவும் ஒன்று. அதனால்தான் நமது பாரம்பரிய விதைகள் தரம் மற்றும் உடல் ஊட்டத்திற்கு மிகவும் ஏற்றது. எனவே, பாரம்பரிய இந்திய விதைகள் பாதுகாக்கப்பட்டு வரும் தலைமுறையினருக்குக் கொண்டு செல்லப்பட வேண்டும். இங்கு உற்பத்தி செய்யப்படும் விதைகள் முக்கியமாக வெளிநாட்டு முறைகள் மூலம் தயாரிக்கப்படுகின்றன.
ஆனால், நமது வேளாண் விஞ்ஞானிகளுக்கு ஒரு நல்ல தளம் கிடைத்தால், அவர்களால் உலகிலேயே அதிகபட்ச உற்பத்தி விதைகளை உருவாக்க முடியும். இந்த நோக்கத்திற்கான ஆர். அண்டு டி. பி., பி.எஸ்.எஸ்.எல்.லால் செய்யப்படும். உலகில் விதைகள் ஏற்றுமதிக்கு மிகப்பெரிய சந்தை உள்ளது. இதில் இந்தியாவின் பங்கு ஒரு சதவீதத்திற்கும் குறைவாக உள்ளது. இந்தியா போன்ற பரந்த மற்றும் விவசாயம் சார்ந்த நாடு அதிக பங்கைப் பெறுவதற்கு காலவரையறை இலக்கை நிர்ணயிக்க வேண்டும்” என்றார்.
இந்த நிகழ்ச்சியில், மத்திய கூட்டுறவுத்துறை இணையமைச்சர் பி.எல்.வர்மா, கூட்டுறவு அமைச்சகத்தின் செயலாளர் மற்றும் வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகத்தின் செயலாளர் உட்பட பல உயரதிகாரிகள் கலந்து கொண்டனர்.