தீபாவளிப் பண்டிகை நெருங்கி வருவதை முன்னிட்டு, லண்டனில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தீபாவளிக் கொண்டாட்டத்தில் ஏராளமானோர் உற்சாகத்துடன் கலந்துகொண்டு நடனமாடினர். இதை இங்கிலாந்து மக்களும் கண்டு ரசித்ததோடு, உள்ளுர் மக்களுடன் இணைந்து நடனமாடி மகிழ்ந்தனர்.
தீபாவளிப் பண்டிகை நாடு முழுவதும் நவம்பர் 12-ம் தேதி கொண்டாடப்படுகிறது. தீபாவளி என்றாலே ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்தான். புத்தாடை அணிந்து, பட்டாசு வெடித்து, பலகாரங்கள் சுவைத்து… அடடா… அது ஒரு புதிய அனுபவம். ஆண்டுக்கு ஒருமுறை வரும் தீபாவளிப் பண்டிகைக்காக காத்திருக்கும் சிறுவர்களின் உள்ளம் துள்ளிக் குதிக்கும். பணக்காரர்கள் முதல் ஏழைகள் வரை அனைத்துத் தரப்பினரும் தங்களது வசதிக்கேற்ப தீபாவளிப் பண்டிகையை கொண்டாடி மகிழ்வர்.
அந்த வகையில், இந்த ஆண்டு தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, லண்டன் மேயர் சாதிக் கான், அந்நகரில் தீபாவளிக் கொண்டாட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தார். டிராஃபல்கர் சதுக்கத்தில் நேற்று மதியம் 1 மணி முதல் இரவு 7 மணி வரை இந்நிகழ்ச்சி நடந்தது. அப்போது, லண்டனில் வசிக்கும் இந்து, சீக்கிய மற்றும் ஜெயின் சமூகத்தினர் உள்ளிட்ட பல்வேறு சமூகத்தினரும் தீபாவளிக் கொண்டாட்டத்தில் கலந்துகொண்டு தங்களது பாரம்பரிய நடனமாடி உற்சாகமாகக் கொண்டாடி மகிழ்ந்தனர்.
மேலும், யோகா பட்டறைகள், பொம்மலாட்டம், இசை நிகழ்ச்சிகள் என தீபாவளிக் கொண்டாட்டம் களை கட்டியது. அதேபோல, நாட்டுப்புறப் பாடல்களுக்கு குத்தாட்டம் போட்டு பட்டையைக் கிளப்பிய மக்கள், “ஜெய் ஹோ மற்றும் ஜோ ஹை அல்பேலா” ஆகிய பாலிவுட் பாடல்களுக்கும் நடனமாடி மகிழ்ந்தனர். இது தவிர, இந்தியாவின் பல்வேறு மாநிலங்களின் பலகாரங்களை நிகழ்ச்சியில் கலந்துகொண்டர்கள் ருசித்து சாப்பிட்டனர்.
இந்நிகழ்ச்சியில் லண்டனில் வசிக்கும் இந்தியர்கள் மட்டுமல்லாது, இங்கிலாந்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த அனைத்து மக்களும் கலந்துகொண்டு நடனமாடி மகிழ்ந்தனர். இந்நிகழ்ச்சி குறித்துப் பேசிய லண்டன் மேயர் சாதிக் கான், தீபாவளி பண்டிகை இருளுக்கு எதிரான ஒளியின் வெற்றியின் அடையாளமாக இருப்பதாகக் குறிப்பிட்டார்.
இந்த தீபாவளிக் கொண்டாட்டத்தில் முதல் முறையாகக் கலந்துகொண்ட ஆசிரியர் ஜேம்ஸ் என்ற உள்ளூர்வாசி, “இதுதான் நான் கலந்துகொள்ளும் முதல் தீபாவளி பண்டிகை. தீபாவளி ஒரு அற்புதமான பண்டிகை. உண்மையிலேயே இப்பண்டிகை எனக்கு நம்பமுடியாத அளவுக்கு முற்றிலும் புதிய அனுபவத்தைக் கொடுத்தது. இது வேற லெவல் பண்டிகை. ஒவ்வொரு இடமும், எங்களுக்கு ஒரு புதிய அனுபவத்தைக் கற்றுக்கொடுக்கிறது” என்று கூறினார்.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண் ஒருவர் கூறுகையில், “இந்தியாவுக்கு வெளியே நான் தீபாவளியை கொண்டாடுவது இதுவே முதல் முறை. இது மிகவும் நன்றாக இருக்கிறது. மிகவும் அருமையான அனுபவம். புதிய மனிதர்களைச் சந்திப்பதை நாங்கள் அனைவரும் ரசிக்கிறோம். இந்திய உணவின் மீது எனக்கு மிகுந்த ஆசை இருந்தது. கடைசியாக அது எனக்கு இங்கு கிடைத்தது. மேலும், இது தீபாவளி பண்டிகைக்கு ஒரு நல்ல தொடக்கம்” என்றார்.
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விவியன் என்ற உள்ளூர்வாசி கூறுகையில், “ட்ரஃபல்கர் சதுக்கத்தில் இது எனது முதல் தீபாவளி அனுபவம். உண்மையிலேயே இதை நான் மிகவும் ரசித்தேன். எனக்கு நடனமாடுவது மிகவும் பிடிக்கும். எனவே, எனது நண்பருடன் சேர்ந்து தீபாவளி பண்டிகையில் நடனமாடி மகிழ்ந்தோம். இங்குள்ள சூழல் அற்புதமாக இருந்தது. மக்களும் மிகவும் நட்புடன் இருக்கிறார்கள்” என்றார்.