விராட் கோலியின் பிறந்த நாளான இன்று அவர் தன்னுடைய 49 வது சதத்தை அடித்துள்ளார்.
ஒரு நாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. அதில் இன்றைப் போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இதில் இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் விளையாடி வருகின்றனர். இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
இந்தியாவின் தொடக்க வீரர்களாக களமிறங்கிய ரோஹித் சர்மா 40 ரங்களிலும் கில் 23 ரன்களிலும் ஆட்டமிழக்க அடுத்ததாக களமிறங்கினார் விராட் கோலி.
இவருடன் சரியாக ஒத்துழைப்பு கொடுத்து ஸ்ரேயாஸ் ஐயரும் விளையாடி வந்த நிலையில் 37 வது ஓவரில் ஸ்ரேயாஸ் ஐயர் 7 பௌண்டரீஸ் மற்றும் 2 சிக்சர்கள் என அடித்து மொத்தமாக 87 பந்துகளில் 77 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார்.
இந்நிலையில் நிதானமாக விளையாடி வந்த விராட் கோலி 10 பௌண்டரீஸ் என மொத்தமாக 121 பந்துகளில் 101 ரன்களை அடித்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் உள்ளார்.
இது விராட் கோலியின் 49 வது சதமாகும். இதன் மூலம் ஒரு நாள் போட்டிகளில் அதிக சதம் அடித்தவர்களில் சச்சினின் சாதனையை சமன் செய்துள்ளார்.
மேலும் உலககோப்பை வரலாற்றில் அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் விராட் கோலி மூன்றாவது இடத்திற்கு முன்னேறினார். இதன் மூலம் சச்சினுக்கு பிறகு உலகக்கோப்பையில் அதிக ரன்கள் அடித்த இந்திய வீரர் என்ற பெருமையை விராட் கோலி படைத்திருக்கிறார்.
இது மட்டுமல்லாமல் சொந்த மண்ணில் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் விராட் கோலி இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
இந்தப் பட்டியலில் சச்சின் டெண்டுல்கர் 6976 ரன்கள் உடன் முதலிடத்தில் உள்ள நிலையில் விராட் கோலி 6000 ரன்கள் உடன் இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருக்கிறார். இதே போன்று இன்றைய ஆட்டத்தில் விராட் கோலி தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 3 ஆயிரம் ரன்கள் அடித்திருக்கிறார்.
இதன் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் ஐந்து அணிகளுக்கு எதிராக 3000 ரன்கள் அடித்த வீரர் என்ற பெருமையை விராட் கோலி பெற்றிருக்கிறார். சச்சின் டெண்டுல்கர் 7 அணிகளுக்கு எதிராக மூன்றாயிரம் ரன்கள் அடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.