பெண்கள், விவசாயிகள், இளைஞர்கள் மற்றும் ஏழை மக்கள் ஆகியோர்தான் நாட்டின் 4 தூண்கள். இந்த 4 தூண்களும் வளர்ச்சி அடையும்போது நாடு வளர்ச்சி அடையும் என்று பாரதப் பிரதமர் நரேந்திர மோடி புதிய விளக்கம் அளித்திருக்கிறார்.
பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக ஜார்க்கண்ட் மாநிலத்திற்குச் சென்றிருக்கிறார். அங்கு, ராஞ்சியில் அமைந்திருக்கும் சுதந்திரப் போராட்ட வீரர்கள் அருங்காட்சியகம் மற்றும் பிர்சா முண்டா நினைவு அருங்காட்சியகத்தை பிரதமர் மோடி பார்வையிட்டார்.
தொடர்ந்து, பி.எம். கிசான் திட்டத்தின் கீழ், 15-வது தவணைத் தொகையாக 2,000 ரூபாய் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டது. நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு 15-வது தவணைத் தொகையை வெளியிட்டார். பின்னர், குந்தி மாவட்டத்தில் நடந்த பேரணியில் விக்சித் பாரத் சங்கல்ப் யாத்ராவை பிரதமர் மோடி கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, “பழங்குடியினரின் பெருமை தினத்தை முன்னிட்டு நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகள். இன்றைய நாள் நல்ல அதிர்ஷ்டம் நிறைந்த நாளாகும். பிர்சா முண்டா நினைவுப் பூங்கா மற்றும் சுதந்திரப் போராளிகள் அருங்காட்சியகத்தைப் பார்வையிடும் வாய்ப்புக் கிடைத்தது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு, இந்த அருங்காட்சியகத்தை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் பாக்கியம் எனக்கு கிடைத்தது.
மேலும், இந்த விக்சித் சங்கல்ப் யாத்திரை இன்று தொடங்கி ஜனவரி 26-ம் தேதி வரை நடைபெறும். இந்த யாத்திரை நாட்டிலுள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் செல்லும். இதன் மூலம் ஒவ்வொரு கிராமத்திற்கும் மத்திய அரசே நேரடியாகச் செல்கிறது. மேலும், இந்த யாத்திரையின்போது ஒவ்வொரு ஏழை மற்றும் தாழ்த்தப்பட்ட நபரும் அரசு திட்டங்களின் பயனாளிகளாக ஆக்கப்படுவார்கள்.
பெண்கள், விவசாயிகள், இளைஞர்கள் மற்றும் ஏழை மக்கள் ஆகியோர்தான் நாட்டின் 4 தூண்கள். இந்த 4 தூண்களும் வளர்ச்சி அடையும்போது நாடும் வளர்ச்சி அடையும். கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் 13 கோடி இந்தியர்கள் வறுமையில் இருந்து மீட்கப்பட்டிருக்கிறார்கள். ஜார்க்கண்ட் மாநிலத்திற்கு 50,000 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்கள் பரிசாகக் கிடைத்திருக்கிறது.
விஸ்வகர்மா யோஜனா திட்டத்தின் கீழ் 13,000 கோடி ரூபாய் செலவழிக்கப்பட்டிருக்கிறது. 15,000 கோடி வரை கால்நடைகளுக்கு இலவசமாக தடுப்பூசி போடப்பட்டிருக்கிறது. பல தசாப்தங்களாக சமூக நீதி மற்றும் மதச்சார்பின்மை பற்றி நம் நாட்டில் நிறைய பேசப்படுகிறது. ஆனால், நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் எதிரான பாகுபாடுக்கான அனைத்து சாத்தியக் கூறுகளும் அகற்றப்படும்போதுதான் உண்மையான மதச்சார்பின்மை வரும்” என்றார்.